தவெகவினர் சமூக ஊடகங்களில் பொய்களைப் பரப்பினால் உண்மையை போட்டுடைப்போம் என்று மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்..
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்துள்ளது.. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. எனினும் ஆட்சியமைக்க போதுமான பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு வழங்கியது.
இதை தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு வழங்கியதால் தவெக ஆட்சி அமைத்தது. எனினும் தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே தவெக ஆட்சியமைக்க திமுக தொந்தரவாக இருக்காது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி அருகிறார்..
இந்த சூழலில் தஞ்சாவூரில் திமுக எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.. அப்போது பேசிய அவர் “ தோல்வி, வெற்றி இரண்டையும் சமமாக கருதி உழைத்துக் கொண்டிருக்கும் இயக்கம் தான் திமுக.. திமுக ஏதோ படுதோல்வி அடைந்துவிட்ட மாதிரி ஒரு தோற்றத்தை எதிரிகள் சித்தரித்து வருகின்றனர்..
இதுவரை நடந்த தேர்தலில் திமுக பலமுறை தோல்வி சந்தித்திருக்கிறது.. ஆனால் தோல்வி நேரத்தில் தான் பீனிக்ஸ் பறவை போல் திமுக எழுச்சி பெறும்.. நாம் சோகமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.. நாம் தான் இன்று ஆட்சியில் இருக்கிறோம்.. நமது திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்களை நிறைவெற்றினோம்..
திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களை யாராலும் மாற்ற முடியாது.. எனவே நமது திட்டங்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டை ஆள்வது திராவிட மாடல் ஆட்சி தான்.. நமது கட்சி என்பது ஒரு கட்டமைப்பை கொண்டிருக்கும் கட்சி.. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த உடனேயே நாம் சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம்.. எஸ்.ஐ,ஆர், பாக முகவர்களை நியமிப்பது, மாநாடுகளை நடத்தியது என நாம் அனைத்து பணிகளையும் செய்து தோல்வியை சந்தித்தோம்.. அவர்கள் வாக்காளர்களை சந்திக்காமல், பூத் ஏஜெண்ட் அமைக்கவில்லை.. இப்படி எந்த பணியையும் செய்யாமல் ஆட்சிக்கு வந்துள்ளனர்..” என்று கூறினார்..
இந்த நிலையில் தவெகவினர் சமூக ஊடகங்களில் பொய்களைப் பரப்பினால் உண்மையை போட்டுடைப்போம் என்று மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ தஞ்சைத் தரணியில் அன்புச் சகோதரர் பூண்டி கலைவாணன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன். பூண்டி கிருஷ்ணசாமி அவர்கள், பூண்டி கலைச்செல்வன் அவர்கள் எனக் கழகத்துக்காகவே தம் வாழ்வை ஒப்படைத்துக் கொண்ட கழகக் குடும்ப விழா இது!
சிறிய இடைவெளிக்குப் பிறகு, வெளியூர் வருகிறேன். நேற்று, திருச்சியில் இறங்கியது முதலே கழக உடன்பிறப்புகளும் மக்களும் என்னைக் கண்டதும் வெளிப்படுத்திய உணர்வினை நான் புரிந்துகொண்டேன்.
உங்களை நானறிவேன். என்னை நீங்கள் அறிவீர்கள். நமக்குள் வார்த்தைகள் தேவையில்லை. ஒரு புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆட்சி நடத்த நாம் தொந்தரவாக இருக்கப் போவதில்லை. நடத்தட்டும்! ஆனால், இயலாமையை மறைக்க நம் மேல் அவதூறுகள் கொண்டு தாக்கினால் விளக்கம் அளிப்போம். சமூக ஊடகங்களில் பொய்களைப் பரப்பினால் உண்மையைப் போட்டுடைப்போம் என உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்..



