தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் ஆப் மூலமும் புகார் தெரிவிப்பதற்கான தொடர்பு எண்களை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதை தடுப்பதற்கும், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துவது தொடர்பாகவும் போக்குவரத்து ஆணையர் தலைமையில் காவல் துறை இணை மற்றும் ஆணையர்கள், சிஎம்டிஏ பொது மேலாளர், எம்டிசி துணை மேலாளர், எஸ்இடிசி மேலாண் இயக்குநர் மற்றும் தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் கடந்த அக்டோபர் 14 அன்று மாநில போக்குவரத்து ஆணையரகத்தில் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான பயணங்களை சிரமமின்றி மேற்கொள்ளவும், அதே சமயத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் சென்று வர கூடுமான வரை வேண்டாம் எனவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, ஆம்னி பேருந்துகளில் 50% மட்டுமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் சுங்க சாவடிகளில் இடையூறு இன்றி செல்ல தனியான வழித்தடம் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டு அதனை கண்காணிக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் உள்ள 12 சரகங்களில் சிறப்பு பறக்கும் படை (Enforcement Team) குழு அமைக்கப்பட்டு அக்டோபர் 16 முதல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொது மக்கள் போக்குவரத்து தொடர்பான புகார்களை 24/7 தெரிவிக்கும் பொருட்டு தமிழகம் உள்ள 12 சரக அலுவலகங்களிலும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் செய்திதாள் மற்றும் செய்தி தொலைக்காட்சி வாயிலாக வெளியிடப்பட்டுள்ளன. இச்செயல்பாட்டின் மூலம் இதுவரை 357 சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டு ரூ.43,55,961 இணக்க கட்டணம் மற்றும் வரியாக பெறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு Abhi Bus, Red Bus. Make My Trip போன்ற முன் பதிவு ஆன்லைன் செயலிகள் கண்காணிக்கப்பட்டு அதிகமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளை கண்டறிந்து கட்டணங்களை குறைக்க அறிவுறுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து (சென்னை) 97893 69634, 93613 41926 , 90953 66394 ( மதுரை) 93848 08302 ( கோயம்புத்தூர்) , 98400 23011( வேலூர்) எண்கள் மூலம் தொலைப்பேசி வாயிலாகவோ, வாட்ஸ் ஆப் மூலம் குறுஞ்செய்தி அல்லது குரல் பதிவாகவோ புகார் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.



