இந்தியாவில் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களைத் தேடும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வங்கிகளை விட அரசு உத்தரவாதம் கொண்ட சேமிப்புத் திட்டங்களுக்கே பொதுமக்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தபால் நிலையத்தின் “கிசான் விகாஸ் பத்ரா” (KVP) திட்டம் மீண்டும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்திய அஞ்சல் துறை நாடு முழுவதும் 1.5 லட்சத்திற்கும் அதிகமான கிளைகள் மூலம் பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டு சேவைகளை வழங்கி வருகிறது. PPF, சுகன்யா சம்ரித்தி திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், RD, NSC போன்ற திட்டங்களுடன், பாதுகாப்பான நீண்டகால முதலீட்டு வாய்ப்பாக KVP திட்டமும் செயல்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், இதில் முதலீடு செய்யும் தொகை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நேரடியாக இரட்டிப்பாகும் என்பதுதான். தற்போது அரசாங்கம் இந்தத் திட்டத்திற்கு 7.5 சதவீத வட்டியை வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில் முதலீட்டாளர்களின் தொகை 115 மாதங்களில், அதாவது 9 ஆண்டுகள் 7 மாதங்களில் இரட்டிப்பாகிறது.
இதனால் குழந்தைகளின் கல்வி, திருமணம், எதிர்கால சேமிப்பு போன்ற நீண்டகால தேவைகளுக்காக பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்பும் நடுத்தர குடும்பங்கள் இந்தத் திட்டத்தை அதிகம் தேர்வு செய்து வருகின்றன. உதாரணமாக ஒருவர் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால், முதிர்வு காலம் முடிவில் ரூ.4 லட்சம் பெற முடியும். இதில் முதலீட்டு தொகை ரூ.2 லட்சமும், வட்டி வருமானமாக மேலும் ரூ.2 லட்சமும் சேர்த்து வழங்கப்படும். பாதுகாப்பான வருமானம் கிடைப்பதால் இந்தத் திட்டம் தற்போது கிராமப்புறங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை பரவலாக பேசப்பட்டு வருகிறது.
மேலும் இந்த திட்டத்தில் ரூ.1000 முதலீட்டிலிருந்தே கணக்கைத் தொடங்கலாம். அதிகபட்ச முதலீட்டிற்கு எந்த உச்சவரம்பும் இல்லாதது கூடுதல் பலனாக பார்க்கப்படுகிறது. 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் சேரலாம். தனிநபர் கணக்கு மட்டுமின்றி, மூன்று பேர் வரை இணைந்து கூட்டு கணக்காகவும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் குழந்தைகளின் பெயரிலும் பாதுகாவலர்கள் மூலம் முதலீடு செய்யும் வசதி உள்ளது. அவசர காலங்களில் இந்த முதலீட்டு சான்றிதழை அடமானமாக வைத்து வங்கிகளில் கடன் பெறும் வசதியும் வழங்கப்படுகிறது. இந்தியாவின் எந்த தபால் நிலையத்திற்கும் கணக்கை மாற்றிக் கொள்ளும் வசதியும் இருப்பதால், வேலை காரணமாக இடம் மாறுபவர்களுக்கும் இது உதவிகரமாக உள்ளது.
ஆதார் அட்டை, பான் கார்டு உள்ளிட்ட அடிப்படை ஆவணங்களுடன் இந்தத் திட்டத்தில் எளிதாக இணைய முடியும். பாதுகாப்பு, நிலையான வட்டி மற்றும் நீண்டகால வருமானம் ஆகிய மூன்றையும் ஒரே நேரத்தில் வழங்கும் திட்டமாக கிசான் விகாஸ் பத்ரா தற்போது முதலீட்டாளர்களிடையே முக்கிய இடத்தை பிடித்துள்ளது.



