இந்தியாவை கேவலப்படுத்தி, சுகாதாரமற்ற நாடாக காட்டும் வகையில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அமெரிக்கப் பெண் ஒருவர் அதற்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய நபர் ஒருவர், தனது பெரிய தொப்பையின் மீது ரொட்டி உருட்டுவது போன்றும், நெற்றி வேர்வையை துடைப்பது போன்றும் அருவருப்பான காட்சி ஒன்று இணையத்தில் பரவியது. சுமார் 2.8 கோடி பார்வைகளை கடந்த இந்த வீடியோ, இந்தியாவில் எடுக்கப்பட்டது போன்ற பிம்பத்தை உருவாக்கியது.
கிறிஸ்டன் ஃபிஷர் என்ற அமெரிக்க பெண், இந்த வீடியோ முற்றிலும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என்பதையும், இந்தியாவை வேண்டுமென்றே மோசமாக காட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு யாரோ திட்டமிட்டு செய்துள்ளனர் என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளார்.
மேலும், “உலக மக்கள் ஏன் இந்தியாவை மிக அசுத்தமான இடம் என்று நினைக்கிறார்கள் தெரியுமா? இணையத்தில் உலவும் இதுபோன்ற போலிப் பதிவுகளால்தான். உண்மையில் இந்தியாவில் யாரும் தன் தொப்பை மீது ரொட்டி உருட்டுவதில்லை. இந்தியாவைப் பற்றி உலகம் முழுவதும் இப்படிப்பட்ட தவறான ஊடகத் தகவல்களே பரப்பப்படுகின்றன. உண்மையில் இந்தியா என்பது அற்புதமான மனிதர்கள் வாழும் ஒரு சிறந்த நாடு; ஆனால் இந்த வீடியோவில் காட்டுவது போன்ற தோற்றம் இந்தியாவுக்கு கிடையாது” என்று ஃபிஷர் பேசியுள்ளார்.
கிறிஸ்டன் ஃபிஷரின் இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியாவைப் பற்றிய தவறான பிம்பத்தை உடைத்து, உண்மையை வெளிக்கொண்டு வந்ததற்காக இந்தியர்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் பலரும் அவருக்குத் தங்கள் நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர்.



