‘கேஜிஎஃப்’ திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய நடிகர் யாஷ், தற்போது தனது திரைப்பயணத்தில் அடுத்தடுத்த பெரிய படங்களை நோக்கி நகர்ந்து வருகிறார். கன்னட சினிமாவை இந்திய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வரும் அவர், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பையும் மறுக்கவில்லை. அரசியல் தொடர்பான கேள்விக்கு யாஷ் அளித்த பதில் தற்போது கவனம் பெற்றுள்ளது.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் யாஷ், ‘கேஜிஎஃப்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமானார். தற்போது ‘ராமாயணம்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் மூலம் அவரது அடுத்த படைப்புகள் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இதுதவிர, யாஷ் நடித்துள்ள ‘டாக்சிக்’ திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படம் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ‘ஆப் கி அதாலத்’ நிகழ்ச்சியில் யாஷ் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் நடிகர் விஜய் தமிழகத்தின் முதல்வராகிவிட்ட நிலையில், விஜய்யைப் போலவே தனக்கும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதால், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவாரா என்றும், முதல்வராக வேண்டும் என்ற ஆசை உள்ளதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த யாஷ், தற்போது நடிகராக தனது பயணத்தில் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருப்பதாக தெரிவித்தார். குறிப்பாக கன்னட சினிமாவை இன்னும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக கூறினார்.
அரசியலைப் பொறுத்தவரை, மக்களுக்காக முடிவெடுத்து அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதும், மக்களுக்காக பணியாற்றுவதுமே முக்கியம் என தான் புரிந்துகொண்டிருப்பதாக யாஷ் தெரிவித்தார். எதிர்காலத்தில் அரசியலுக்கான தேவை ஏற்பட்டால், அதில் நுழைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார். அதே நேரத்தில், தற்போது அரசியலுக்கு வருவதற்கான எந்தத் தேவையும் இல்லை என்றும், ஒரு நடிகராக தான் செய்ய வேண்டிய பணிகளுக்கே தற்போது அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் யாஷ் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் அவரது அரசியல் வருகை குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு யாஷ் நேரடியாக பதிலளித்துள்ளார்.
Also Read: விமான நிலையத்தில் ஆயுத சோதனை… துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து 2 ஊழியர்கள் காயம்!



