அடிலைட் மைதானத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை இந்தியா குவித்துள்ளது.
169ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியுள்ளது. டாஸ்வென்ற இங்கிலாந்து முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் இந்தியா முதலில் பேட் செய்யத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் ஷர்மா களம் இறங்கினர். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே விளையாட்டை தொடங்கிய நிலையில் முதல் ஓவரிலேயே கே.எல்.ராகுல் அவுட் ஆனதால் ரசிர்களிடையே பீதியை கிளப்பியது. 5 ரன்கள் எடுத்த நிலையில் அவர் வெளியேறினார்.
ரோகித் ஷர்மா 4 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்தார். பின்னர் களம் இறங்கிய விராட் கோலி தொடக்கத்திலேயே சிக்சர் அடித்து ரசிகர்களுக்கு ஊக்கமளித்தார். 4 பவுண்டரிகள் அடித்து அரை சதம் அடித்த விராட் கோலி அடுத்த பந்திலேயே வெளியேறினார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக சூரியகுமார் யாதவ் களம் இறங்கினார். ஆனால் 10 பந்துகளில் 14 ரன்களே அவர் எடுத்தார்.
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 3 ஓவர்களே எஞ்சியிருந்ததால் ஹர்திக் பாண்டியா மரண அடி அடித்தார். அடுத்தடுத்து 2 சிக்சர்கள் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. 4 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் அடித்த ஹர்திக் பாண்டியா 63 ரன்களை குவித்தார். ரிஷப் பண்ட் 4 பந்துகளில் 6 ரன்கள் எடுத்திருந்தார். ஹர்திக் இன்னும் ரன்கள் குவிப்பார் என நினைத்த நிலையில் அவர் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி ஆடிய அதிரடி ஆட்டத்தில் 6 விக்கெட் இழந்து 168 ரன்கள் குவித்துள்ளது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை எட்டுமா? என பார்க்கலாம். இதனால் ஆட்டம் விறுவிறுப்படைந்துள்ளது.