தேசிய புலனாய்வு முகமை முதலில் பா.ஜ. மாநிலத் தலைவர் அண்ணாமலையை விசாரியுங்கள் என அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து சட்டம் ஒழுங்கு தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மின்சாத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடபெற்ற இந்த கூட்டத்தில் ஆட்சியர் சமீரன் , மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதன் பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், ’கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நடந்து 12 மணி நேரத்திற்குள் உரிமையாளர் யார் , இறந்தவர் யார் போன்ற விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. 24 மணி நேரத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அன்று மாலையே இயல்பு நிலைக்கு திரும்பியது. காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டுள்ளனர். தீபாவளி நாளில் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் இன்றி பண்டிகை கொண்டாட காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில செய்திகளில் பதற்றத்தை ஏற்படுத்துவது போன்றே செய்தி வெளியிடுகின்றனர். குறுகிய மனப்பான்மையோடு சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் விஷயத்தை பூதாகரமாக்குகின்றனர். என்.ஐ.ஏ. விசாரணைக்கும் பரிந்துறைக்கப்பட்டுள்ளது.
ராணுவ வீரர் உயிரிழப்பை அரசியலாக்க முயற்சித்த நபர் , கோவை கார் வெடிப்பை அரசியலாக்குகின்றார். தேசிய புலனாய்வு முகமை முதலில் பா.ஜ. மாநிலத் தலைவர் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும். காவல்துறையினர் சந்தேகப்படும் நபர்களிடம் விசாரணை நடத்தி குற்றவாளிகளை அடையாளம் கண்டறிந்து கைது செய்வார்கள். காவல்துறை தகவலை வெளியிடும் முன்பே அண்ணாமலை தகவல்களை வெளியிடுகின்றார் என்றால் அவரை விசாரிக்க வேண்டும்.
கோவையில் பந்த் என்ற பெயரில்அரசியலாக்குகின்றார்கள். பதற்றத்தை ஏற்படுத்த நினைக்கின்றார்கள். வியாபாரிகளை , பொதுமக்களை மிரட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.