தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரையில் பயன்படுத்திய சொல்லாடல் அவையில் காரசார விவாதத்தை ஏற்படுத்தியது. அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டுப் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், பாலியல் குற்றங்கள் குறித்துப் பேசுகையில் ‘கற்பு’ என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.
இதற்கு அவையிலேயே உடனடியாக எழுந்து கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) பெண் எம்.எல்.ஏ. லதா. “முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது உரையின்போது கற்பு தொடர்பான வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். இதுபோன்ற சூழல்களில் ‘பாலியல் வன்கொடுமை’ என்ற வார்த்தையைத்தான் முறைப்படி பயன்படுத்த வேண்டும்.
அவ்வாறு ஒரு குற்றம் நிகழும்போது, பெண்ணுக்கு மட்டும்தான் கற்பு பறிபோகிறதா? ஆண்களுக்கு கற்பு கிடையாதா? உண்மை என்னவென்றால், அத்தகைய இழிவான குற்றங்களை செய்யும்போது முதலில் கற்பு பறிபோவது ஆணுக்குத்தான். எனவே, இனிமேல் சட்டமன்றத்தில் இதுபோன்ற பிற்போக்குத்தனமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என்று கூறினார்.
சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் லதாவின் இந்தப் பேச்சுக்கு, காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.எல்.ஏ. தாரகை அவையின் மேஜையைத் தட்டி தனது ஆதரவைத் தெரிவித்தார். இதனால் சட்டமன்ற அவையில் சிறிது நேரம் அனல் பறக்கும் சூழல் உருவானது.



