பலரது வீட்டில் அடிக்கடி சம்பாத்தி செய்வார்கள். சப்பாத்தி செய்த பிறகு அவற்றை முறையாக சுத்தம் செய்யாமல் தொடர்ந்து பயன்படுத்தினால், மாவு ஒட்டிக்கொண்டு கருப்பு கறைகள் உருவாகும். இதனால் சப்பாத்திக் கட்டை பழையதாக தோன்றுவதோடு மட்டுமல்லாமல், பாக்டீரியா வளர்ச்சிக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. குறிப்பாக மரத்தால் செய்யப்பட்ட சப்பாத்தி கட்டையில் ஈரப்பதம் நீண்ட நேரம் தங்கினால், சுகாதார பிரச்சனைகளும் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே அவற்றை அவ்வப்போது சுத்தம் செய்வது மிகவும் அவசியம். அதற்காக வீட்டிலேயே இருக்கும் சில எளிய பொருட்களை பயன்படுத்தி சப்பாத்தி கட்டையை புதிது போல மாற்ற முடியும். முதலில் அவற்றை 10 முதல் 15 நிமிடங்கள் வரை சுடுநீரில் ஊறவைக்க வேண்டும். இதனால் ஒட்டிக்கொண்ட மாவு மற்றும் அழுக்கு மென்மையாகி எளிதாக நீங்கும்.
மேலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு டிடர்ஜென்ட் பவுடர் சேர்த்து கலக்க வேண்டும். பின்னர் அந்த கலவையை ஸ்பாஞ்ச் அல்லது ஸ்க்ரப்பர் மூலம் பாய் மற்றும் குச்சியில் நன்றாக தேய்க்க வேண்டும். எலுமிச்சையில் உள்ள அமில தன்மை கருப்பு கறைகள் மற்றும் பிசுக்குகளை வேகமாக அகற்ற உதவும். சில நிமிடங்களிலேயே பழைய பாய் கூட புதிது போல மின்னும்.
இதற்குப் பதிலாக வினிகரையும் பயன்படுத்தலாம். இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அதில் பாய் மற்றும் குச்சியை 5 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பின்னர் தூரிகை அல்லது ஸ்க்ரப்பர் கொண்டு தேய்த்தால் பிடிவாதமான கறைகளும் எளிதில் நீங்கும். கறைகள் மிகவும் அதிகமாக இருந்தால், அதே கலவையில் சிறிதளவு உப்பையும் சேர்க்கலாம்.
உப்பு இயற்கையான சுத்திகரிப்பானாக செயல்பட்டு, பாக்டீரியாக்களையும் அழிக்க உதவுகிறது. சுத்தம் செய்த பிறகு பாய் மற்றும் குச்சியை சுத்தமான தண்ணீரில் அலசி, உலர்ந்த துணியால் துடைத்து, சிறிது நேரம் வெயிலில் காயவைக்க வேண்டும். இதனால் ஈரப்பதம் முழுமையாக நீங்கி, நீண்ட நாட்கள் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்த முடியும்.



