மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் கணவன் ஒருவர், மனைவிக்கே தெரியாமல் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று, அதற்குப் பிறகும் பல ஆண்டுகள் குடும்பம் நடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவலின்படி, பாதிக்கப்பட்ட பெண் வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார். அவர் கடந்த 2011ஆம் ஆண்டு பொறியாளரான ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் ஆரம்ப காலங்களில் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், பின்னர் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, அந்தப் பெண் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயார் வீட்டிற்கு சென்று தங்கியிருந்தார். இந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்ட கணவன், தனது மனைவிக்கு தெரியாமல் நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. கணவன், போலியான ஆவணங்கள் மற்றும் தவறான தகவல்களை பயன்படுத்தி, 2019ஆம் ஆண்டிலேயே விவாகரத்து பெற்றதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த விவகாரம் குறித்து தனது மனைவியிடம் எந்த தகவலையும் தெரிவிக்காமல், தொடர்ந்து அவருடன் பழகி வந்துள்ளார். அதிர்ச்சிகரமாக, விவாகரத்து நடந்தது தெரியாத அந்தப் பெண், தனது கணவருடன் வழக்கம்போல் குடும்ப வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளார். பல ஆண்டுகளாக கணவன்-மனைவி உறவிலும் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் குடும்ப பிரச்சினைகள் மேலும் தீவிரமானதைத் தொடர்ந்து, அந்தப் பெண் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அப்போது தான், “ஏற்கனவே 7 ஆண்டுகளுக்கு முன்பே உங்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது” என்ற தகவல் நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த தகவலை அறிந்த அந்தப் பெண் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். பல ஆண்டுகளாக தன்னை ஏமாற்றி குடும்பம் நடத்தி வந்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையடுத்து, கணவன் மீது அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது அனுமதி இல்லாமல் போலி ஆவணங்கள் மூலம் விவாகரத்து பெற்றதுடன், உண்மையை மறைத்து தன்னை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பயன்படுத்திக் கொண்டதாக அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். அவர் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் சித்திரவதை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Read more: இவற்றை நீங்கள் மைக்ரோவேவில் சூடுபடுத்துகிறீர்களா..? உடனே நிறுத்துங்கள்..! இல்லன்னா சிக்கல்..!



