தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சென்ற கார் விபத்துக்கு உள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக பணியாற்றி வந்த பூரண ஜெய ஆனந்த் திருச்செந்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் காரில் சென்றுள்ளார். அவருடன் தனி பாதுகாவலர் நவீன்குமார், வழக்கறிஞர் எஸ்.தன ஜெயராமச்சந்திரன் (வயது 56), நீதிமன்றப் பணியாளர் ஸ்ரீதர் குமார் (வயது 37), நீதிமன்ற உதவியாளர் உதயசூரியன், நீதிமன்றப் பதிவுரு எழுத்தர் வாசு ராமநாதன் ஆகியோரும் சென்றிருந்தனர்.
திருச்செந்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று காலை காரில் தஞ்சாவூர் புறப்பட்டனர். காரை வாசு ராமநாதன் ஓட்டினார். காலை 9 மணியளவில் எட்டயபுரம் அருகேயுள்ள மேலக்கரந்தை பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரி மீது இவர்களது கார் மோதியது. இதில் கார் நொறுங்கியது. இந்த விபத்தில் ஸ்ரீதர் குமார், வாசு ராமநாதன், காவலர் நவீன்குமார், வழக்கறிஞர் தன ஜெயராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், நீதிபதி பூரண ஜெயஆனந்த், உதயசூரியன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்கு வழக்கு பதிவு செய்து விசாரணையில் நடத்தி வருகின்றனர்.