ஒவ்வொரு பெற்றோரின் கனவும், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பாக அமைத்துக் கொடுப்பதுதான். குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்வி, திருமணம் மற்றும் எதிர்கால செலவுகளை பற்றி பல பெற்றோர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு சேமிக்க விரும்புகின்றனர். இதற்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள முக்கிய சேமிப்பு திட்டங்களில் ஒன்றாக சுகன்யா சம்ரித்தி யோஜனா பார்க்கப்படுகிறது.
பெண் குழந்தைகளுக்கான இந்த சிறப்பு சேமிப்பு திட்டம், “செல்வ மகள் சேமிப்பு திட்டம்” என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. 2015ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம், பெண் குழந்தைகளின் எதிர்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
யார் கணக்கு தொடங்கலாம்? இந்த திட்டத்தில், 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர் அல்லது சட்டபூர்வ பாதுகாவலர்கள் கணக்கைத் தொடங்கலாம். ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகளுக்காக இந்த கணக்கைத் தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது. இந்த கணக்கை தபால் நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் தொடங்க முடியும். குறைந்தபட்சமாக ரூ.250 முதல் முதலீட்டை தொடங்கலாம். ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதி உள்ளது.
அதிக வட்டி.. வரி விலக்கும்! தற்போது இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இது சாதாரண வங்கி FD-களை விட அதிகமான வட்டி விகிதமாக கருதப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கும், கிடைக்கும் வட்டிக்கும், இறுதியில் பெறப்படும் தொகைக்கும் வரி விலக்கு வழங்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பான முதலீட்டுடன் அதிக வருமானம் கிடைக்கும் திட்டமாக இது பார்க்கப்படுகிறது.
ரூ.71 லட்சம் பெறுவது எப்படி? இந்த திட்டத்தில் தொடர்ந்து 15 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். ஆண்டுதோறும் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்தால், தினசரி சேமிப்பு கணக்கில் பார்த்தால் அது சுமார் ரூ.410 மட்டுமே ஆகும். தற்போதைய 8.2% வட்டி அடிப்படையில் கணக்கிட்டால்:
மொத்த முதலீடு – ரூ.22.5 லட்சம்
வட்டி வருமானம் – ரூ.49.32 லட்சம்
21 ஆண்டுகள் முடிவில் கிடைக்கும் தொகை – சுமார் ரூ.71.82 லட்சம்
அதாவது சிறிய தொகையாக தினசரி சேமித்து வந்தால், மகளின் உயர்கல்வி அல்லது திருமணத்திற்காக பெரிய நிதியை உருவாக்க முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பாதுகாப்பான முதலீடு, அரசு உத்தரவாதம், அதிக வட்டி மற்றும் வரி விலக்கு போன்ற பல நன்மைகள் இருப்பதால், நடுத்தர குடும்பங்கள் அதிகம் தேர்வு செய்யும் திட்டமாக இது மாறியுள்ளது. குறிப்பாக பெண் குழந்தைகளின் எதிர்கால நிதி திட்டமிடலில் இந்த திட்டம் முக்கிய பங்காற்றி வருகிறது.



