புதுச்சேரி வில்லியனூர் அருகில் உள்ள பொறையூரை சேர்ந்தவர் பிரதீஷ் (23). இவர் அந்த பகுதியில் பழக்கடையில் வேலை பார்த்த போது 17 வயது சிறுமியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து நெருக்கமாக இருந்தார் என்று கூறப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், அந்த சிறுமி மற்றவர்களுடன் பேசினாலே அவர் சந்தேகப்பட தொடங்கி இருக்கிறார். ஆகவே கடந்த 2021 ஆம் ஆண்டு சிறுமியை வில்லியனூர் பகுதியில் இருந்து பொறையூரில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்ற அவர், அவருடன் உரையாடியுள்ளார்.
அதோடு, தன்னைத் தவிர வேறு யாருடனும் பழகவில்லை என்று சத்தியம் செய்யுமாறு தெரிவித்துள்ளார். சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமையை பாட்டிலால் தாக்கி கொலை செய்து சாக்கு முட்டையில் கட்டி வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
அந்த சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் வழங்கிய புகாரின் அடிப்படையில் வில்லியனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பிரதீஷை கைது செய்து இருக்கிறார்கள். அவர் மீதான வழக்கு விசாரணை புதுவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார்.
விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம் சுமத்தப்பட்ட பிரதிஷுக்கு ஆயுள் தண்டனையும் 4,000 ரூபாய் அபராதமும் விதித்து, அதை கட்ட தவறினால் மேலும் 6 மாத கால சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி செல்வநாதன் உத்தரவு பிறப்பித்தார். அதோடு சிறுமியின் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.