ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ் வழங்க உரிய அரசாணையை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை அளித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்கும்படி திருப்பத்தூர் தாசில்தாருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தனது குழந்தைகளுக்கு சாதி மற்றும் மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் எந்தச் சலுகைகளையும் கேட்க மாட்டேன். சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்க கோரினேன். ஆனால் சாதி மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்க தாசில்தார்களுக்கு அதிகாரம் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கைத் தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சந்தோஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீய்டு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம். எஸ். ரமேஷ், என். செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரருக்கு அதுபோல் சான்றிதழை ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். சாதிய ரீதியிலான பாரபட்சத்தைத் தடுக்க வேண்டும் எனப் போராடி வரும் நிலையில், சாதி, மதம் இல்லை என சான்றிதழ் கோரும் மனுதாரருக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.
தொடர்ந்து சாதி, மதம் இல்லை என சான்றிதழ் வழங்க வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி, உரிய அரசாணையை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்குப் பரிந்துரைத்தனர். சமூக வாழ்க்கையில், அரசியலில், கல்வியில், வேலை வாய்ப்பில், ஜாதி, மதம் இன்னும் முக்கியத்துவம் பெற்றிருப்பதாக உயர்நீதிமன்றம் வேதனை அளிப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.