பிரிட்டனின் வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பான (NATS) விமானச் செயலாக்க முறைமையில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, லண்டன் ஹீத்ரோ, கேட்விக், மான்செஸ்டர் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு விமானப் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தரவுகளின்படி, இங்கிலாந்து முழுவதும் 625 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஈசிஜெட் நிறுவனத்தின் 218 விமானங்களும், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் 132 விமானங்களும் மற்றும் பல்வேறு விமான நிறுவனங்களின் சேவைகளும் இதனால் முடங்கியுள்ளன. வான்வெளி மூடப்படவில்லை என்றாலும், விமானங்களை திறம்பட நிர்வகிக்கும் திறன் குறைந்ததாலும், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து பிரிட்டன் செல்லும் மற்றும் வரும் சேவைகள் தாமதமானதாலும் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறுக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டதாக NATS அமைப்பு அறிவித்துள்ள போதிலும், விமானங்களின் கால அட்டவணையில் ஏற்பட்டுள்ள பெரிய அளவிலான தேக்கநிலை காரணமாக, முழுமையான இயல்பு நிலை திரும்புவதற்கு நீண்டநேரம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக இது போன்ற கோளாறுகள் ஏற்படுவதற்குப் பொறுப்பேற்று NATS தலைமை நிர்வாகி பதவி விலக வேண்டும் என்று ரயான்டேர் மற்றும் விஸ் ஏர் போன்ற விமான நிறுவனங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், பயணிகள் யாரும் உறுதி செய்யப்படாத விமானங்களுக்கு விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டாம் எனவும், தாங்கள் செல்லும் விமானத்தின் தற்போதைய நிலையைத் தொடர்ந்து சரிபார்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



