கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்துள்ள முள்ளி கிராம்பட்டு என்ற பகுதியில் 4 தினங்களுக்கு முன்னதாக கோதண்டபாணி என்பவரின் மகனான விக்னேஷ், தனசேகர் என்பவரை சரமாரியாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த தனசேகர் புதுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
புதுச்சேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவினில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது தனசேகருக்கு. இந்த நிலையில், அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் வழங்கினர். ஆனாலும் இந்த புகாரை காவல்துறையினர் வாங்க மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க இன்று காலை புதுவை மருத்துவமனையில் தனசேகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஆகவே அவரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், தாக்குதல் வழக்கை கொலை வழக்கமாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி நெல்லிக்குப்பம் தபால் நிலையம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
இதுகுறித்த தகவலை அறிந்து கொண்ட பண்ருட்டி காவல் துணை கண்காணிப்பாளர் சபியுல்லா, காவல் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் காவல் துறையைச் சார்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து ஊர் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.