காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்தே செயல்பட்டு வருவதாகவும், முதல்வர் விஜய் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து வரும் என்பதால் தான் அவர் அமைதி காப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும், முதல்வர் விஜய் எப்போது இது குறித்துப் பேசுவார் என்றும் முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியிருந்தார். அதேபோல், இக்கூட்டம் தேவையில்லை எனக் கூறிய நிர்மல் குமாரை ‘கட்சித் தாவல் வல்லுநர்’ என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், காவிரி விவகாரத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்துதான் தமிழக அரசு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், இதில் யாருக்கும் எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லை என்றார்.
அண்டை மாநிலத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்புவதை காட்டிலும், அனைவரும் ஒன்றிணைந்து டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரின் கனவாக உள்ளது. அந்த பொற்காலம் தற்போது வெற்றிகரமாக தொடங்கியுள்ளதாக கூறிய அவர், தமிழகத்திற்கு ஒரு நல்ல முதலமைச்சர் கிடைத்திருப்பதாக தெரிவித்தார். மேலும், “முதலமைச்சர் விஜய் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து வந்துவிடும், அதனால் தான் அவர் அமைதி காக்கிறார்” என்று தெரிவித்தார்.
Read More : நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்த வீடு..!! 3 பேர் உயிரிழந்த சோகம்..!! கனமழையால் பேரதிர்ச்சி சம்பவம்..!!



