ஜப்பானில் பெருவெள்ளம்!. ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு சிக்கல்? நூற்றுக்கணக்கான வீரர்கள் அவசர வெளியேற்றம்!

japan flood asian games 30kb

ஜப்பானின் நாகோயா நகரில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, அங்கு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. நகரில் ஒரே மணி நேரத்தில் சுமார் 104 மி.மீ மழை பதிவானதை அடுத்து, நகராட்சி அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெளியேற்ற உத்தரவைப் பிறப்பித்தனர். இதனால் அங்கு தங்கியிருந்த நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டனர்.


கப்பல் கொள்கலன்களிலிருந்து தற்காலிகத் தங்குமிடங்களாக மாற்றப்பட்ட கார்டன் பியர் (Garden Pier) பகுதியில் தங்கியிருந்த வீரர்களே உடனடியாக வெளியேற்றப்பட்டவர்களில் அடங்குவர்.

நாகோயா துறைமுக அதிகாரிகளின் கூற்றுப்படி, அப்பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றும் உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அவர்கள் மீண்டும் தங்கள் தங்குமிடங்களுக்குத் திரும்பினர்.

இதற்கிடையில், நாகோயா நகரின் மேயர் இச்சிரோ ஹிரோசவா செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்காலிக அறைகளில் வசித்து வந்த சுமார் 400 விளையாட்டு வீரர்கள் மற்றும் பணியாளர்கள் மழையின் போது உயரமான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவித்தார். சில கட்டிடங்களின் கூரைகளில் தண்ணீர் கசிந்ததாகத் தகவல்கள் வந்தாலும், வீரர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும், போட்டி நடைபெறும் மைதானங்களுக்குப் பெரிய அளவில் சேதம் எதுவும் இல்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார். மேலும், திட்டமிட்டபடியே போட்டிகள் சுமூகமாக நடக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“மைதானங்களின் நிலை குறித்து நாங்கள் கவலைப்படவில்லை, திட்டமிட்டபடி ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது என்று நம்புகிறோம்” என்று அவர் கூறினார்.

மேலும், இந்த மோசமான வானிலை காரணமாக நாகோயாவின் போக்குவரத்து அமைப்புகளும் பாதிக்கப்பட்டன. சப்வே மற்றும் பேருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. ஜப்பான் வானிலை ஆய்வு மையம் இப்பகுதியில் உள்ள ஒரு முக்கிய நதிக்கு மிகக் கடுமையான வெள்ள எச்சரிக்கையை விடுத்தது. AFP செய்தி நிறுவனத்தின்படி, சுமார் 3,500 மக்கள் அவசரகால வெளியேற்று மையங்களில் தஞ்சம் புகுந்தனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள பல அரங்கங்களுக்குள்ளேயும் மழைநீர் புகுந்தது. இருப்பினும், சேதம் குறைவாகவே இருப்பதாகவும், அது விளையாட்டு நிகழ்ச்சிகளைப் பாதிக்காது என்றும் மேயர் ஹிரோசவா தெரிவித்தார். “சில கட்டிடங்களின் கூரைகளில் மழைநீர் கசிவது போன்ற சிறிய பாதிப்புகள்தான் ஏற்பட்டுள்ளன. செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கவிருக்கும் தொடக்க விழாவிற்கு இது எந்த வகையிலும் ஆபத்தை ஏற்படுத்தாது” என்றார்.

குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு வழக்கமான கிராமப் பகுதி அமைக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக அமைப்பாளர்கள் ஒரு சொகுசு கப்பல், ஹோட்டல்கள் மற்றும் தற்காலிக மரத்தாலான தங்குமிடங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஒலிம்பிக் போட்டிகளைக் காட்டிலும் அதிகமானோர் கலந்துகொள்ளும் இப்போட்டிகளில், 17,000-க்கும் மேற்பட்ட வீரர்களும் அதிகாரிகளும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1newsnationuser5

Next Post

ஐபோன் 18 ப்ரோ மற்றும் 18 ப்ரோ மேக்ஸ்!. இந்திய விலை எவ்வளவு தெரியுமா?. மிரட்டலான கேமரா அப்டேட்கள் கசிவு!

Wed Sep 9 , 2026
கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள ஆப்பிள் பார்க்கில் அமைந்துள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் ஆப்பிளின் அடுத்த தலைமுறை ஐபோன் அறிமுக நிகழ்வுக்கான மேடை தயாராகி வருகிறது. சில மணி நேரங்களில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஐபோன்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது. இந்த ஆண்டு ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்படும் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் (Foldable iPhone – ஐபோன் டுஓ) ஆகியவை முக்கியக் கவனத்தைப் […]
iPhone 18 Pro rate

You May Like