கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை எம்ஜிஆர் தெருவில் இரவு நேரத்தில் நுழைந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கிருக்கும் வீடுகளின் கதவுகளை பூட்டி விட்டு திருட முயன்றனர். அப்போது அவர்கள் அங்குள்ள வீடுகளின் மேல் ஏறி சென்றுள்ளனர்.
இதில் அப்பகுதியை சேர்ந்த மாது என்பவரது ஆஸ்பெட்டாஸ் சீட் வீட்டின் மேல் அவர்கள் சென்ற போது வீட்டின் மேலே சென்ற மின்சார ஒயரில் இருந்த மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு சூளகிரி பகுதியை சேர்ந்த மன்சூர் என்ற 18 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் ஆஸ்பெட்டாஸ் சீட்டை உடைத்து வீட்டுக்குள் தொங்கிய நிலையில் இருந்தது. இதுகுறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
இதை தொடர்ந்து உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்ட காவல்துறையினர் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மன்சூரின் கூட்டாளிகள் யார் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.