மும்பை கோரேகாவ் பகுதியில் அடர்ந்த வனப்பகுதி இருக்கிறது. இந்த வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் வசிக்கின்றன.இந்த சிறுத்தைகளோடு மக்கள் காடுகளில் வீடு கட்டி வசிக்கின்றனர்.
இதனால் அடிக்கடி சிறுத்தைகள் மனிதர்கள் நடமாடும் பகுதிக்குள் நுழைந்து விடுகிறது. அடிக்கடி மனிதர்களை சிறுத்தைகள் தாக்கும் சம்பவங்களும் நடக்கிறது. இதில் பலர் உயிரிழந்திருக்கின்றனர். அது போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்திருக்கிறது. கோரேகாவ் ஆரே காலனியில் வசிப்பவர் அகிலேஷ்.
இவருக்கு ஒன்றரை வயதில் ஒரு மகள் இருந்தார். அகிலேஷ் மனைவி பாரதி அதிகாலை நேரத்தில் வீட்டிற்கு அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு விளக்கேற்றி சாமி கும்பிட சென்றார். அவர் சாமி கும்பிட சென்ற நேரத்தில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தை எழுந்தது. அக்குழந்தை வீட்டில் தாய் இல்லாததை கண்டு மெதுவாக வீட்டை விட்டு வெளியில் வந்தது. அந்த நேரம் புதருக்குள் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று குழந்தை எதிகாவின் கழுத்தை கடித்து தூக்கிக்கொண்டு ஓட முயன்றது. அந்நேரம் சாமி கும்பிட சென்ற குழந்தையின் தாய் வீட்டிற்கு திரும்பினார்.
சிறுத்தை குழந்தையுடன் வருவதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சல் போட்டு கத்தினார். அதற்குள் சிறுத்தை குழந்தையுடன் அடர்ந்த காட்டுக்குள் ஓடி மறைந்தது. குழந்தையின் பெற்றோர் பக்கத்து வீட்டுக்காரர்களின் துணையோடு குழந்தையை தேடி காட்டுக்குள் சென்றனர்.
காட்டுக்குள் குழந்தையுடன் நின்ற சிறுத்தை, பொதுமக்களை பார்த்தவுடன் குழந்தையை அப்படியே போட்டுவிட்டு காட்டுக்குள் ஓடிவிட்டது. உடனே கழுத்தில் பலத்த காயம் அடைந்த குழந்தை சிகிச்சைக்காக அந்தேரி செவன் ஹில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டது.
கடந்த ஒரு மாதத்தில் நான்காவது முறையாக சிறுத்தைகள் இப்படி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறை அதிகாரி மல்லிகார்ஜுனா கூறுகையில், “இரவு நேரத்தில் மக்கள் சிறுவர்களை வெளியில் அனுப்புவதை தவிர்க்கவேண்டும்” என்று தெரிவித்தார்.