காலை அல்லது மாலை நேரத்தில் சுலபமாகவும், ஆரோக்கியமாகவும் ஒரு டிபன் செய்ய நினைக்கிறீர்களா? அதிலும் மாவை அரைத்து பல மணி நேரம் புளிக்க வைக்க நேரமில்லையா? அப்படியானால், உடனடியாக தயாரிக்கக்கூடிய கம்பு தோசை ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். சிறுதானியமான கம்பில் நார்ச்சத்து, இரும்புச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளதால், இது உடல்நலத்திற்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. குறிப்பாக உடல் எடையைக் கட்டுப்படுத்த விரும்புபவர்களும், சமச்சீர் உணவுமுறையை பின்பற்றுபவர்களும் கம்பை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த இன்ஸ்டன்ட் கம்பு தோசையை தயாரிக்க கம்பு மாவு ஒரு கப், அரிசி மாவு அரை கப், ரவை இரண்டு டேபிள்ஸ்பூன், தயிர் கால் கப், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு துருவிய இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லித்தழை, ஒரு டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, தண்ணீர் மற்றும் சுடுவதற்கு தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய் ஆகியவை தேவைப்படும்.
முதலில் ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, அரிசி மாவு மற்றும் ரவையை ஒன்றாக கலந்து, அதில் தயிர் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கட்டிகள் இல்லாமல் ரவா தோசை மாவைப் போல சற்று நீர்த்த பதத்தில் கரைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், மிளகுத்தூள், கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
தோசைக்கல்லை மிதமான தீயில் நன்கு சூடாக்கிய பின், மாவை ஓரங்களிலிருந்து ஊற்றி நடுப்பகுதியில் நிறைவுசெய்யும் வகையில் பரப்ப வேண்டும். பின்னர் தோசையைச் சுற்றி சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பொன்னிறமாக மொறுமொறுப்பாக வெந்ததும் எடுத்துப் பரிமாறலாம். இந்த தோசையை திருப்பிப் போட்டு வேகவைக்க வேண்டிய அவசியமில்லை. தேங்காய் சட்னி, கார சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை மேலும் அதிகரிக்கும்.
Also Read: தாமதமாக உணவு கொடுத்த மனைவி; ஆத்திரத்தில் கொடூரமாக குத்திக் கொலை செய்த கணவர்..



