திருமணம் செய்ய பெண் கிடைக்காத விரக்தியில் 36 வயது ஆன விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்திற்கு பெண் கிடைப்பதற்குள் உயிரே போய் விடும் போல இருக்கே என நெட்டிசன்கள் ஜாலியாக சமூக வலைத்தளங்களில் கலாய்த்து மீம்ஸ்கள் வெளியிடுவதை அவ்வப்போது காண முடிகிறது. அதுவும் 90 கிட்ஸ்களுக்கு திருமணே ஆவதில்லை என விடாமல் அவர்களை விரட்டி விரட்டி 2 கே கிட்ஸ்கள் மீம்ஸ்களை அள்ளி தெளித்து வருகிறார்கள். இது வெறும் ஜாலிக்காக கலாய்பது மட்டும் இல்லை. உண்மையில் 90 கிட்ஸ்கள் பலரும் பெண் கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள் என்றுதான் பொதுவாக பலரும் கருத்தும் சொல்லும் விஷயமாக உள்ளது. இப்படி நெட்டிசன்கள் திருமணத்திற்கு கிடைக்கவில்லை என்பதை கூட ஜாலியாக எடுத்துக் கொண்டு கலாய்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க கர்நாடக மாநிலத்தில் 36 வயது நபர் பெண் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தை சேர்ந்த மாசங்கி பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சு நாத். இவருக்கு 36 வயது ஆகிறது. விவசாயியான இவருக்கு திருமணம் செய்து முடித்து வைக்க பெற்றோர்கள் விரும்பினர். இதற்காக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே பெண் பார்க்க தொடங்கினர். மகனுக்கு நல்ல வரனாக பார்த்து அமைத்துக் கொடுக்க நினைத்த பெற்றோர், உறவினர்களுடன் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் கூறி மணப்பெண்ணை தேடி வந்தனர். ஆனால், எந்த பெண்ணுமே அமையவில்லையாம்.
தற்போதுதானே பார்க்க ஆரம்பித்து இருக்கிறோம்.. எப்படியும் கிடைத்து விடும் என்று முழு வீச்சில் பெற்றோர்கள் தேடிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். ஆனால், நாட்கள் கடந்ததே தவிர பெண் கிடைத்த பாடில்லை. இப்படியே ஆண்டுகள் கடந்து மஞ்சுநாத் 36 வயதை எட்டி விட்டார். 28 வயதில் இருந்தே பெண் பார்த்து வந்த போதிலும் 8 ஆண்டுகளாக பெண் கிடைக்காததால் கடும் மன விரக்தியில் மஞ்சுநாத் இருந்துள்ளார். நண்பர்கள் எல்லோரும் திருமணம் முடித்து செட்டில் ஆகிவிட்டாலும் நமக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்ற ஏக்கத்துடன் மஞ்சுநாத் இருந்து வந்துள்ளார். விவசாய தொழில் செய்து வந்ததால் யாரும் பெண் கொடுக்க மறுக்கிறாரக்ள் என்று பெற்றோரும் வருத்தத்துடன் சொல்லி வந்துள்ளனர். இதைப்பார்த்த மன வேதனை அடைந்த மஞ்சுநாத்திற்கு திடீரென விபரீத எண்ணம் ஏற்பட்டது.
மணப்பெண்ணும் கிடைப்பது இல்லை, பெற்றோருக்கும் தொந்தரவு கொடுத்து வருகிறோம் என மன உளைச்சலில் இருந்த மஞ்சுநாத் தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தவிட்டார். அதன்படி, மஞ்சுநாத் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பாக எழுதி வைத்த கடிதத்தில், மேலும் எனது பெற்றோருக்கு நான் தொல்லை கொடுக்க விரும்பவில்லை என உருக்கத்துடன் மஞ்சுநாத் எழுதி வைத்துள்ளார். திருமணம் ஆகவில்லையே என்ற ஏக்கத்தில் 36 வயது விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.