ஒடிசா ரயில் விபத்து குறித்து கேள்வி கேட்டால் அவர்கள் நம் மீதே பழி சுமத்துவார்கள் எனவும் மோடி பின்பக்க கண்ணாடியை பார்த்து கார் ஓட்டுகிறார் என்றும் அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இந்திய வம்சாவளி மக்களிடம் பேசினார். முன்னதாக ஒடிசா ரயில் விபத்தில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பிறகு பேசிய ராகுல் காந்தி, ‘இந்திய நாகரீகம் என்பது யாரையும் அடிப்பது, யாரையும் வெறுப்பது அல்லது இழிவுபடுத்துவது அல்ல. அன்பு தான் உண்மை. அதை நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம். வெறுப்பைப் பரப்புவது தான் பாஜகவின் வேலையாக உள்ளது.
நீங்கள் பாஜகவிடம் கேள்வி கேட்டால், அவர்கள் திரும்பி நம் மீதே பழியை சுமத்துவார்கள். ஒடிசா ரயில் விபத்து எப்படி நடந்தது என்று அவர்களிடம் கேட்டால், அதற்கு அவர்கள் கடந்த 50 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்று கேட்பார்கள்? காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த ரயில் விபத்து குறித்த நினைவு எனக்கு இருக்கிறது. அப்போது நடந்த ரயில் விபத்திற்கு, ஆங்கிலேயர்களால் இது நடந்தது என்று காங்கிரஸ் கட்சி பழியை தூக்கி போடவில்லை. அப்போது இருந்த காங்கிரஸ் தலைவர்கள் விபத்துக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்கிறேன் என்று கூறினார்கள். காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை போன்று, இந்தியாவில் ஒரு கோட்சேவுக்கும், மற்றொரு காந்திக்கும் இடையே போர் நடந்து வருகிறது. பிரதமர் மோடி காரை ஓட்ட முயற்சிக்கிறார். ஆனால் அவர் பின்பக்க கண்ணாடியை பார்க்கிறார். அதனால் அந்த கார் முன்னோக்கி செல்லாமல் விபத்தில் சிக்குகிறது. ஆனால் அது அவருக்குப் புரியவில்லை. பாஜவினர் எப்போதுமே எதிர்காலத்தை பற்றி பேசமாட்டார்கள். கடந்த காலத்தைப் பற்றி மட்டுமே பேசுவார்கள் என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.