கடந்த 15ம் தேதி குஜராத் மாநிலம் சூரத்தில் ஒருவர் மற்றொருவரை தூக்கிக்கொண்டு சாலையில் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
சிசிடிவி காட்சிகளில் சாலையில் இருந்த நபர் சோஹில் சுபேதார் சிங், தனியார் பள்ளியில் ஓட்டுநர் என்றும், அவர் தூக்கிச் சென்ற நபர் ரமேஷ்சந்திர உபாத்யாய் என்றும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
ரமேஷ் சந்திர உபாத்யாய் தனியார் பள்ளியில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார். மேலும் சுபேதாருடன் தங்கிருக்கும் அறையைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இரவு வெகுநேரம் கழித்து வரும் சுபேதார் அறைக் கதவைத் திறக்க அறையின் கதவை வேகமாக தட்டியதாகவும், பிறகு கதவை சடார் என்று மிகுந்த சத்தத்துடன் சாத்தியதாகவும் கூறப்படுகிறது.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சுபேதார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த உபாத்யாய் கீழே விழுந்தார். தனது நண்பர் சுருண்டு விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த சுபேதார், தனது நண்பரை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், சுபேதார் தாக்கியதில் உபாத்யாய் பரிதாபமாக இறந்துள்ளார். நண்பன் இறந்து போனதை அறியாத சுபேதார் அவனது பிணத்தை தூக்கிக்கொண்டு சாலையில் பதற்றத்துடன் நடந்து சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் சுபேதாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.