மதுரை ராஜாஜி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற நோயாளியை அழுகிய காலுடன் வெளியில் வீசி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்குட்பட்ட சாலை பகுதியில் பிரகாஷ் என்ற கூலி தொழிலாளி கால்களில் புண்களுடன் சாலை ஓரத்தில் கிடந்துள்ளார். அவரை மீட்ட சமூக ஆர்வலர்கள் சிலர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது அங்கு பணியிலிருந்த பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் சிலர் அவருக்கு சிகிச்சை அளிக்காமல் அழுகிய காலுடன் இருக்கும் அவரை வீல் சேரில் வைத்து பிணவறை அருகேயிருக்கும் சாலையில் கொண்டு வந்து வீசி இருக்கின்றனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து இச்சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து நோயாளி பிரகாஷ் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ரத்தினவேல் நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் செய்ததாக இரண்டு பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்ட நான்கு பேரை சஸ்பெண்ட் செய்துள்ளார். மேலும் இது தொடர்பாக விரிவான விசாரணைக்கும் உத்தரவிட்டிருக்கிறார். மருத்துவமனையில் நோயாளியின் மீது காட்டப்பட்ட அலட்சியம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.