கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியான ஒசகோட்டை பகுதியில் தனது கணவர், 4 வயது மகன் ஜெயானந்த் உடன் வசித்து வந்தவர் ஜோதி. இந்த நிலையில் சிறுவன் ஜெயானந்த் குளியல் அறைக்கு சென்று அங்கிருந்த வாட்டர் ஹீட்டரை ஆன் செய்துள்ளான். அப்போது சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால், ஜெயானந்த் அலறல் சத்தம்கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் ஜோதி குளியல் அறைக்கு சென்றுள்ளார். மகனை காப்பாற்றும் நோக்கத்தில் மகனை பிடித்துள்ளார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தாய்- மகன் 2 பேரும் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஒசகோட்டை காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மின் இணைப்பை துண்டித்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி தாய்-மகன் உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.