ஓய்வுக்குப் பிறகு பணம் இல்லாமல் வாழ்வது பலருக்கும் மிகப்பெரிய சவாலாக மாறி வருகிறது. அன்றாட செலவுகள் முதல் மருத்துவச் செலவுகள் வரை அனைத்தையும் சமாளிக்க, முன்கூட்டியே நிதி திட்டமிடல் அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த நிலையில், முதியவர்களுக்கு நிலையான வருமானத்தை வழங்கும் வகையில் மத்திய அரசு Senior Citizens Savings Scheme (SCSS) என்ற சிறப்பு சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டம், ஓய்வூதிய வாழ்க்கையில் நிதி சுதந்திரத்தை வழங்குவதே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், 5 ஆண்டுகள் வரை முதலீடு செய்து, காலந்தோறும் வட்டி வருமானம் பெறலாம். மேலும் தேவையெனில், 3 ஆண்டுகள் வரை காலத்தை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. இதன் மூலம், முதியவர்கள் தங்களது அன்றாட தேவைகள் மற்றும் மருத்துவச் செலவுகளை சுயமாக நிர்வகிக்க முடியும்.
இந்தத் திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட இந்தியக் குடிமக்கள் கணக்கு திறக்கலாம். அதேபோல், 55 முதல் 60 வயதுக்குள் தன்னார்வ ஓய்வு (VRS) பெற்றவர்களுக்கும் இதில் சேரும் வாய்ப்பு உள்ளது. முன்பு ரூ.15 லட்சமாக இருந்த முதலீட்டு உச்சவரம்பு, தற்போது ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வட்டி விகிதம் மற்ற சேமிப்புத் திட்டங்களுடன் ஒப்பிடும்போது அதிகமாக இருப்பதும் இதன் முக்கிய சிறப்பம்சமாகும்.
உதாரணமாக, ரூ.30 லட்சம் முதலீடு செய்தால், தற்போதைய சுமார் 8.20% வட்டி விகிதத்தில் ஆண்டுக்கு ரூ.2,46,000 வரை வருமானம் கிடைக்கும். இதன் அடிப்படையில், மாதத்திற்கு சுமார் ரூ.20,500 வரையிலான நிலையான வருமானம் பெற முடியும். இந்தக் கணக்கை நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற வங்கிகளில் திறக்கலாம். அரசு ஆதரவுடன் செயல்படும் திட்டம் என்பதால், முதலீடு பாதுகாப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Read more: சினைப்பை புற்றுநோய்.. பெண்கள் உதாசீனப்படுத்தக் கூடாத 6 ஆரம்ப அறிகுறிகள்! உடனே கவனம் கொடுங்க..



