மனிதர்களின் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகள் இருந்தாலும், பெரும்பாலானோர் சந்திக்கும் பொதுவான பிரச்சனை என்றால் அது முடி உதிர்வுதான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள் முதல் பெண்கள் வரை என பலரும் இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். இதைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பல நிறுவனங்கள் பல்வேறு பெயர்களில் விதவிதமான முடி எண்ணெய்களை விற்பனை செய்து வருகின்றன. ஆனால், அவை அனைவருக்கும் எதிர்பார்த்த பலனை அளிக்கிறதா என்பது பலரிடமும் எழும் கேள்வியாகவே உள்ளது.
அதனால், முடி பிரச்சனைகளுக்கு மாற்று வழியைத் தேடுபவர்கள், கடைகளில் கிடைக்கும் எண்ணெய்களை மட்டுமே நம்பாமல், வீட்டிலேயே இயற்கையான பொருட்களைக் கொண்டு ஒரு முடி எண்ணெயை தயாரித்து பயன்படுத்தலாம். இதனால் ரசாயனப் பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க முடியும். அந்த வீட்டுவழி முடி எண்ணெயை எப்படி தயாரிப்பது என்பதை இந்தச் செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
முடி உதிர்வு மற்றும் வழுக்கை போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில், பலரும் இயற்கை முறைகளையே அதிகம் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், பாரம்பரியமாக தலைமுடி பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வரும் எண்ணெய்களில் கடுகு எண்ணெயும் ஒன்று. இதில் உள்ள சத்துக்கள் தலைச்சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்கி, மசாஜ் செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் சீராக இயங்க உதவக்கூடும். இதனால் மயிர்க்கால்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், தலைமுடி வலிமையாக இருக்கவும் உதவலாம் என்று பலர் நம்புகின்றனர்.
இந்தக் கடுகு எண்ணெயை தனியாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, சில இயற்கை பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தினால் தலைமுடி பராமரிப்பில் கூடுதல் பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. உதாரணமாக, செம்பருத்தி இலை மற்றும் பூவிதழ்களை நன்றாக அரைத்து அதனுடன் தேவையான அளவு கடுகு எண்ணெய் கலந்து பேஸ்ட் போல தயாரிக்கலாம். இந்தக் கலவையை தலைச்சருமத்தில், குறிப்பாக முடி குறைவாக உள்ள பகுதிகளில் தடவி சுமார் 40 நிமிடங்கள் கழித்து மிதமான ஷாம்புவால் அலசலாம். இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தலைமுடி மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவக்கூடும்.
மற்றொரு முறையாக, கடுகு எண்ணெயை லேசாக சூடாக்கி அதில் புதிய கறிவேப்பிலையை சேர்த்து சில நிமிடங்கள் வைத்த பிறகு இறக்கி குளிரவிட வேண்டும். பின்னர் அதை வடிகட்டி சேமித்து வைத்து வாரத்தில் இரண்டு முறை தலைச்சருமத்தில் மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து தலைமுடியை அலசலாம். இந்த முறை தலைச்சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும், முடியின் வேர்களை வலுப்படுத்தவும் உதவக்கூடும்.
அதேபோல், கற்றாழை ஜெல்லுடன் கடுகு எண்ணெயை கலந்து தலைச்சருமத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசலாம். கற்றாழையில் உள்ள இயற்கையான ஈரப்பதமூட்டும் தன்மையும், கடுகு எண்ணெயின் ஊட்டச்சத்தும் சேர்ந்து தலைச்சருமத்தை பராமரிக்க உதவக்கூடும். இருப்பினும், எந்த வீட்டுவழி முறையையும் பயன்படுத்துவதற்கு முன் சிறிய பகுதியில் சோதனை செய்து, ஒவ்வாமை அல்லது எரிச்சல் இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.
Also Read: கண்ட கிரீம தூக்கி போடுட்டு இதை பயன்படுத்துங்க… அப்புறம் தங்கம் மாதிரி பளிச்சுனு ஜொலிப்பீங்க.



