குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் இதற்கு ஒரு முடிவே இல்லையா? என்று பலரும் கேட்டு வருகிறார்கள். அதிலும் பச்சிளம் குழந்தைகளுக்கு எதிராக இது போன்ற வன்கொடுமைகள் தொடர்வது அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருக்கிறது.
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவலராக பணியாற்றி வருகின்ற ஒரு பெண் ரயில்வே குடியிருப்பில் வசித்து வருகின்றார். கணவருடன் உண்டான கருத்து வேறுபாடு காரணமாக, இவர் தன்னுடைய 3 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த 21 ஆம் தேதி பெண் காவலரின் 3 வயது குழந்தை சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது ரயில்வே காவலர் ஒருவர் குழந்தைக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்தது பெண் காவலருக்கு தெரிய வந்தது.
இந்த சம்பவம் தெரியவந்ததை தொடர்ந்து, இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவலர் புகார் வழங்கினார். அதன் அடிப்படையில் ரயில்வே காவலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.