தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: மியான்மர் கடலோரப் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் வடக்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மர் மற்றும் வங்கதேசம் கடற்கரையை ஒட்டி நகரக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 6, 7 தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 8, 9 தேதிகளில் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக கடலோர பகுதிகளில் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை. தமிழகத்தில் நேற்று காலை பதிவான மழை அளவுகளின்படி அதிக பட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம் கலவை, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, விழுப்புரம் மாவட்டம் வளத்தி ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.



