நடிகராக நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் பயணித்து வரும் ரவிமோகன், தற்போது தனது திரைப்பயணத்தில் புதிய முயற்சியை தொடங்கியிருக்கிறார். நடிப்பைத் தாண்டி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என புதிய பொறுப்புகளை ஏற்றுள்ள அவர், யோகி பாபுவை கதையின் நாயகனாக வைத்து ‘An Ordinary Man’ என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு கெனிஷா இசையமைக்கிறார்.
ரவிமோகனின் தனிப்பட்ட வாழ்க்கை ஏற்கனவே பல்வேறு விவாதங்களை சந்தித்த நிலையில், அவரது புதிய படத்திலும் கெனிஷா முக்கிய பங்கு வகிப்பது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. இருவருக்கும் இடையிலான நெருக்கம் குறித்து கடந்த காலங்களில் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இருவரும் பிரிந்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.
ரவிமோகனின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டன. அதில் கெனிஷாவுடனான அவரது நெருக்கமும் முக்கிய காரணம் என ஒரு தரப்பினர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர். இதனால் கெனிஷாவையும் இந்த விவகாரம் தொடர்ந்து சுற்றி வந்தது.
ஒருகட்டத்தில் ரவிமோகனின் ரசிகர்கள் சிலர் கெனிஷாவின் சமூக வலைதளப் பதிவுகளில் அவரை விமர்சித்ததுடன், ரவிமோகனிடம் இருந்து விலக வேண்டும் என்றும் பதிவிட்டனர். இதன் பின்னர் கெனிஷா சென்னையை விட்டு செல்லப்போவதாக குறிப்பிட்டிருந்தார். இதனால் இருவருக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
ஆனால், ‘An Ordinary Man’ படத்தில் கெனிஷா இசையமைப்பாளராக இணைந்திருப்பது அந்த தகவல்களுக்கு மாறான சூழலை உருவாக்கியுள்ளது. ரவிமோகன் இயக்கும் முதல் படத்திலேயே அவர் முக்கியமான தொழில்நுட்ப பொறுப்பை ஏற்றிருப்பது தற்போது திரையுலக வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
நடிகராக பல ஆண்டுகள் பயணித்த ரவிமோகன், தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்ற புதிய பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அதே நேரத்தில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றிய சர்ச்சைகளும் தொடர்ந்து பேசுபொருளாக உள்ளன. இத்தகைய சூழலில் உருவாகும் ‘An Ordinary Man’ திரைப்படம் அவரது புதிய முயற்சிக்கு எந்த அளவுக்கு வெற்றியைத் தேடித் தரும் என்பதற்கு படம் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
Also Read: பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்! 26.5 ஏக்கரில் பிரமாண்ட வளாகம்..



