உறவுகளில் நம்பிக்கையைவிட சந்தேகம் மேலோங்கும்போது, அதன் விளைவுகள் சில நேரங்களில் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு விபரீதமாக மாறிவிடுகின்றன. அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே திருமணமான சில மாதங்களிலேயே இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியை கொலை செய்து, உடலை துண்டுகளாக வெட்டி வீட்டில் மறைத்து வைத்ததாக அவரது கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுகாத்தி அருகே உள்ள பசிஸ்தாபூர் பகுதியில் வாடகை வீட்டில் 25 வயதான ரியா தலுக்தார் தனது கணவர் ராமானுஜ் கோஸ்வாமியுடன் வசித்து வந்தார். செப்டம்பர் 3ஆம் தேதி இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தகராறு தீவிரமடைந்த நிலையில், ராமானுஜ் தனது மனைவியை கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துக்குப் பிறகு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீசார் வீட்டுக்குள் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது ரியாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது தலையை தனியாக துணிப்பையில் சுற்றி பிரிட்ஜில் வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், அவரது சில விரல்களும் வெட்டப்பட்டிருந்தன.
கொலைக்குப் பிறகு தலைமறைவான ராமானுஜ் கோஸ்வாமியை போலீசார் கைது செய்தனர். சம்பவத்தில் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஆயுதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
ரியாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்ததால் தம்பதிக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக ராமானுஜ் விசாரணையில் தெரிவித்ததாக போலீசார் கூறியுள்ளனர். ஆனால், இந்தக் காரணம் மட்டுமே கொலைக்கான முழுமையான பின்னணியா, சம்பவத்துக்கு வேறு காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
திருமணமாகி சில மாதங்களிலேயே இந்தக் கொலை நடந்துள்ளது கவுகாத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு உறவில் ஏற்படும் கருத்து வேறுபாடு, சந்தேகம் அல்லது கோபம் எந்த நிலையிலும் வன்முறைக்கு காரணமாகிவிடக் கூடாது என்பதையும் இந்தச் சம்பவம் மீண்டும் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளது.
Also Read: ரவிமோகனின் புதிய பயணத்தில் கெனிஷா! குடும்பப் பிரச்சினைக்கு பிறகு வெளியான முக்கிய அப்டேட்..



