வாடிக்கையாளர் சேவைகளில் வட்டார மொழிகளை சேர்க்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.
வங்கிகளின் வாடிக்கையாளர் சேவையில் வட்டார மொழிகளைப் பயன்படுத்துவது குறித்து விரிவான வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.பொதுத்துறை வங்கிகள் (PSBs) இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என நிதிச் சேவைகள் துறை அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து வங்கிகளும் கணக்கு திறக்கும் படிவங்கள், பணம் செலுத்தும் சீட்டுகள், பாஸ் புத்தகங்கள் போன்ற வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அனைத்து அச்சிடப்பட்ட பொருட்களையும் இந்தி, ஆங்கிலம் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டார மொழியில் வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.
மேலும், கிராமப்புற மற்றும் சிறு நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுடன் பயனுள்ள தகவல் தொடர்பை உறுதி செய்ய, பணியாளர்கள் நியமனத்தின்போது அவர்கள் வட்டார மொழித் தேர்வில் தேர்ச்சி பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.



