இன்றுமுதல் உலகநாடுகள் மீது பரஸ்பர வரிவிதிப்பு!. உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப்!. இந்தியாவை எவ்வளவு பாதிக்கும்?

trump 90days

இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.


அமெரிக்காவின் சர்வதேச வர்த்தகத்தில் பெரியளவில் ஏற்றத்தாழ்வு இருப்பதாகக் குற்றஞ்சாட்டி வந்த டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல் பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் உலக நாடுகளைத் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். டிரம்பின் இந்த அறிவிப்பால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்தன.

2021-25-ம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 18 சதவீதம், இறக்குமதியில் 6.22 சதவீதம், பரஸ்பர வர்த்தகத்தில் 10.73 சதவீதம் அமெரிக்காவை சார்ந்ததாகும். இவ்வாறு மிகப்பெரிய வர்த்தக பங்காளியான இந்தியா, அமெரிக்க பொருட்களுக்கு அதிகளவு வரி விதித்து வருகிறது என்பது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. எனவே இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்போவதாக தொடர்ந்து மிரட்டி வந்தார்.

இந்த சூழலில்தான் சர்வதேச நாடுகள் மீது பரஸ்பர வரி என்ற போர்வையில் அதிக வரி விகிதங்களை கடந்த ஏப்ரல் 2-ந்தேதி அறிவித்தார். இதில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 26 சதவீத கூடுதல் வரியை அறிவித்தார். டிரம்பின் இந்த பரஸ்பர வரி விகிதங்களுக்கு உலக நாடுகளிடம் கடும் எதிர்ப்பு கிளம்பிய போதும், தன்னுடைய வரி விதிப்பில் இருந்து யாரும் தப்ப முடியாது என்பது போல் தான் அவரது நடவடிக்கை இருந்தது. அதேநேரம் பல்வேறு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையிலும் அமெரிக்கா ஈடுபட்டு வந்தது. இதற்காக இந்த வரிவிதிப்பை முதலில் ஜூலை 9 வரையும், பின்னர் ஆகஸ்டு 1 வரையும் அவர் நிறுத்தி வைத்தார்.

உக்ரைன் போருக்கு முன்பு ரஷியாவிடம் இருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி 0.2 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது அது 30 முதல் 40 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. அந்தவகையில் சீனாவுக்குப்பின் அதிக இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. எனவே இந்தியாவை நேரடியாகவே மிரட்டி வந்த டிரம்ப், யாரும் எதிர்பாராத வகையில் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி ஆகஸ்டு 1 (இன்று) முதல் அமலுக்கு வருவதாக திடீரென அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

இந்தநிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல நாடுகள் மீது வரிகளை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். 10 முதல் 41 சதவீதம் வரை வரிகளை விதிக்கும் உத்தரவை டிரம்ப் பிறப்பித்துள்ளார். இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு பொருளாதார பாதுகாப்பை வழங்கும் என்றும், பல ஆண்டுகளாக நிலவி வரும் வர்த்தக ஏற்றத்தாழ்வை நீக்கும் என்றும் அவர் கூறுகிறார். பல நாடுகளின் வரி விகிதங்களைக் குறிப்பிடும் அறிக்கையை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

‘இந்துஸ்தான் டைம்ஸ்’ செய்தியின்படி, புதிய வரி விகிதத்தில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25%, தைவானில் இருந்து வரும் பொருட்களுக்கு 20% மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் பொருட்களுக்கு 30% வரி விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு 19 சதவீதமும், ஜப்பானுக்கு 15 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இஸ்ரேலுக்கு 15 சதவீதமும், ஈராக் மீது 35 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் தென்னாப்பிரிக்கா மீது 30 சதவீதமும், தென் கொரியா மீது 15 சதவீதமும், இலங்கை மீது 20 சதவீதமும் வரி விதித்துள்ளார்.

வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல் குறிப்பில், புதிய கட்டண விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்படுத்தப்படும் என்றும், ஆனால் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு அது நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. கனடாவிற்காக டிரம்ப் ஒரு வித்தியாசமான அமைப்பை உருவாக்கியுள்ளார். ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, கனடா மீது 35 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இது முன்னதாக 25 சதவீதமாக இருந்தது. சட்டவிரோத போதைப்பொருள் நெருக்கடியைத் தடுக்க கனடா தவறிவிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

ஆகஸ்ட் 1 முதல் அமலாக்கம் செய்யப்படும் இந்த 25% வரி மூலம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் மருந்து பொருட்கள், வைரம், தங்க நகைகள், ஆடைகள், இயந்திரங்கள், ரசாயனங்கள், வாகனங்கள் மற்றும் இரும்பு, பித்தளை பொருட்கள் போன்றவற்றின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, கனடாவுக்கு 35 சதவிகிதமும், அல்ஜீரியா, இலங்கை மற்றும் இராக் ஆகிய நாடுகளுக்கு 30 சதவிகித வரியும், புரூணே, லிபியா மற்றும் மால்டோவா ஆகிய நாடுகளுக்கு 25 சதவிகிதமும், பிலிப்பின்ஸுக்கு 20 சதவிகிதமும் டிரம்ப் அதிரடியாக வரி விதித்தது குறிப்பிடத்தக்கது.

Readmore: UPI பயனர்களே கவனம்.. இன்று முதல் புதிய விதிகள் அமல்.. முழு விவரம் இதோ..

KOKILA

Next Post

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்...!

Fri Aug 1 , 2025
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப் படிப்புக்கு தொடர்ந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 31 என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் விண்ணப்பப் பதிவை இன்று முதல் தொடர்ந்து மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக உயர் கல்வி அமைச்சர் வெளியிட்ட […]
college admission 2025

You May Like