தலைநகர் டெல்லியில் பெய்த கனமழை காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பெருமளவில் தண்ணீர் தேங்கியது. இதனால் மும்பை, அகமதாபாத் மற்றும் போர்ட் பிளேர் ஆகிய நகரங்களில் இருந்து டெல்லி வந்தடைய வேண்டிய பல உள்நாட்டு விமானங்கள் கடுமையாக தாமதமாகின.
விமான நிலையத்தின் வருகை பகுதி மற்றும் முனையங்களில் தண்ணீர் முழங்கால் அளவிற்கு தேங்கியதால், பயணிகள் தங்கள் உடமைகளை சுமந்து கொண்டு தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட பயணி மான்சி கூறுகையில், நான் இதுவரை இப்படி ஒரு சூழ்நிலையைப் பார்த்ததே இல்லை; எங்கு பார்த்தாலும் தண்ணீராக இருக்கிறது. வருகை பகுதிக்கு செல்ல முடியாமல் அரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கிறேன் என்றார்.
இதையடுத்து விமான நிலைய நிர்வாகம் கூடுதல் ஊழியர்களைப் பணியமர்த்தி, தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. மேலும், கார்மேகங்கள் சூழ்ந்து திடீரென பெய்த கனமழையால், ஜன்மாஷ்டமி கொண்டாட்டத்திற்காக வெளியே வந்த பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும், இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40-60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



