புற்றுநோய் சிகிச்சை துறையில் முக்கிய முன்னேற்றமாக கருதப்படும் புதிய நோயெதிர்ப்பு சிகிச்சை மருந்தை முன்னணி மருந்து நிறுவனமான ரோச் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. “டெசென்ட்ரிக் எஸ்சி” (Tecentriq SC) எனப்படும் இந்த மருந்தின் சிறப்பு என்னவென்றால், இதை இனி நரம்பு வழியாக அல்லாமல் தோலடி வழியாகவே செலுத்த முடியும். இதனால் வழக்கமாக இரண்டு மணிநேரம் வரை எடுத்துக்கொள்ளும் சிகிச்சை நேரம் வெறும் 7 நிமிடங்களாக குறைகிறது.
புற்றுநோய் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இது மிகப்பெரிய நிம்மதியை அளிக்கும் மாற்றமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நுரையீரல் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பல மணி நேரம் மருத்துவமனையில் இருக்க வேண்டிய சிரமம் இதன் மூலம் குறைகிறது. ரோச் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், “சிகிச்சை நேரத்தை 80 சதவீதம் வரை குறைக்கும் திறன் இந்த மருந்துக்கு உள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 80 ஆயிரம் பேருக்கு நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், நோயெதிர்ப்பு சிகிச்சை தற்போது புற்றுநோய் மருத்துவத்தில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. மருத்துவர்கள் கூறுவதாவது, தோலடி வழியாக மருந்து செலுத்தும் முறை நோயாளிகளுக்கு உடல் வலியையும் மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.
மெடாண்டா நொய்டா மருத்துவமனையின் மருத்துவ புற்றுநோயியல் துறைத் தலைவர் டாக்டர் சஜ்ஜன் ராஜ்புரோஹித் கூறுகையில், “பல புற்றுநோயாளிகள் மிகவும் பலவீனமாக இருப்பதால் நரம்பைக் கண்டுபிடிப்பதே சிரமமாக இருக்கும். ஆனால் தோலடி வழியாக மருந்து செலுத்துவது எளிதாகவும் குறைந்த வலியுடனும் இருப்பதால் நோயாளிகளுக்கு இது பெரிய உதவியாக இருக்கிறது” என்றார்.
அதேபோல், பெங்களூரு மணிபால் மருத்துவமனையின் டாக்டர் அமித் ரௌதன், “இந்த மருந்தை எடுத்துக்கொள்ள நோயாளிகள் பெரிய மருத்துவமனைக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. பயிற்சி பெற்ற செவிலியர் இருந்தால் வீட்டிற்கு அருகிலுள்ள மையத்திலேயே மருந்து வழங்க முடியும். இதனால் நோயாளிகள் சிகிச்சையை தொடர்ந்து முறையாகப் பெறுகின்றனர்” என தெரிவித்தார்.
இருப்பினும், இந்த புதிய வசதிக்கான செலவு அதிகமாகவே உள்ளது. ஒரு குப்பி மருந்தின் விலை சுமார் ரூ.3.7 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு நோயாளிக்கு சராசரியாக ஆறு சுழற்சிகள் வரை சிகிச்சை தேவைப்படலாம். ஆனால், நோயாளிகளுக்கான ஆதரவு திட்டங்கள் மூலம் செலவை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக ரோச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரோச் நிறுவனத்தின் தலைமைத் தகவல் தொடர்பு அதிகாரி ராஜன் எஸ் கூறுகையில், “Blue Tree” என்ற நோயாளி ஆதரவு திட்டத்தின் மூலம் சிகிச்சைச் செலவுக்கு உதவி வழங்கப்படுகிறது. மேலும், மத்திய அரசு சுகாதாரத் திட்டமான CGHS-லும் இந்த சிகிச்சை முறை சேர்க்கப்படலாம் என தகவல் உள்ளது. EMI வசதிகளும் நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன” என்றார்.
மருத்துவர்களின் தகவல்படி, நுரையீரல் புற்றுநோயாளிகளில் அனைவரும் இந்த சிகிச்சைக்குத் தகுதியானவர்கள் அல்ல. குறிப்பாக PD-L1 என்ற உயிரியல் குறியீடு உள்ள நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை அதிக பலன் அளிப்பதாக கூறப்படுகிறது. மேலும், எதிர்காலத்தில் இந்த மருந்தின் பயன்பாடு அதிகரித்தால், அதன் விலையும் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



