சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அப்பள்ளியின் முன்னாள் மாணவரும், தமிழகப் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சருமான லோகேஷ் தமிழ்ச்செல்வன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.
விழாவின் ஒரு கட்டமாக, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையேயான கயிறு இழுக்கும் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், முன்னாள் மாணவர்கள் அணியின் சார்பில் களமிறங்கிய அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வனும் உற்சாகத்துடன் பங்கேற்றுப் போட்டியாளர்களுடன் இணைந்து கயிற்றைப் பிடித்து இழுத்தார்.
இரு அணிகளும் வெற்றிக்காக தங்களது முழு பலத்தையும் பிரயோகித்து கயிற்றைக் தீவிரமாக இழுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக போட்டிக்காகப் பயன்படுத்தப்பட்ட கயிறு திடீரென அறுந்தது.
கயிறு சட்டென்று அறுந்ததில்,நிலைதடுமாறிய அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் கயிறு இழுத்துக் கொண்டிருந்த 15-க்கும் மேற்பட்டோர் மைதானத்தில் அடுத்தடுத்து விழுந்தனர். அமைச்சர் திடீரென கீழே விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினரும், அதிகாரிகளும் உடனடியாக ஓடிவந்து அவரையும் மற்றவர்களையும் பத்திரமாகத் தூக்கிவிட்டனர். இச்சம்பவத்தால் விளையாட்டு மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Read More : அப்பளம் போல் நொறுங்கிய கார்..!! 5 பேர் துடிதுடித்து மரணம்..!! பொள்ளாச்சியில் சோகம்..!!



