6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய ஜுலை 18-ம் நாளினை தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது. இவ்வறிவிப்பிற்கிணங்க 2022ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு நாள் விழா தொடர்பில் அனைத்து மாவட்டங்களிலும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி முதல் மூன்று பரிசுகள் மாவட்ட அளவில் வழங்கப்பெறுவதுடன் முதல் பரிசு பெறும் மாணவர் மாநிலப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெறுவர்.
மாநிலப் போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடம் வகிக்கும் மாணவர்களுக்கு ஜுலை 18-ம் நாளன்று நடைபெறும் தமிழ்நாடு நாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப் பெற்று வருகின்றனர். சென்னை மாவட்ட அளவில் நடைபெறும் மாவட்டப் போட்டி 04.07.2025 அன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை கல்யாணம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ. 10,000/-இரண்டாம் பரிசு ரூ. 7,000/-, மூன்றாம் பரிசு ரூ. 5,000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.