சீனாவில் ஒரு செல்வந்தக் குடும்பம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. காரணம், அந்தப் பணிக்கான சம்பளமும், விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளும் தான்.
பெய்ஜிங்கைச் சேர்ந்த இந்தக் குடும்பம், தங்களது நான்கு வயது குழந்தைக்கு ஒரு தனிப்பட்ட வீட்டு ஆசிரியரை நியமிக்க விரும்புகிறது. இதற்காக அவர்கள் மாதத்திற்கு 1,68,000 பவுண்டுகள் வரை சம்பளம் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். இந்த அளவிலான சம்பளம் பல பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் மூத்த நிர்வாகிகளின் வருமானத்தையும் மிஞ்சும் என்பதால், இந்த வேலைவாய்ப்பு தனிச்சிறப்பாக பார்க்கப்படுகிறது.
அந்தக் குடும்பம் எதிர்பார்க்கும் தகுதிகளும் சாதாரணமானவை அல்ல. ஆற்றல் மிக்க, சுறுசுறுப்பான, சிறு குழந்தைகளுடன் இயல்பாக பழகக்கூடிய, மகிழ்ச்சியான குணம் கொண்ட நபர் தேவைப்படுகிறார். மேலும், இயற்கையை நேசிக்கும் மனப்பான்மை இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. உடல் தகுதி கட்டாயமாகவும், புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
தொடக்க கட்டத்தில் பெண் விண்ணப்பதாரர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் நபர், வீட்டு உதவியாளர்களுடன் இணைந்து பணிபுரிந்து, நான்கு வயது சிறுவனும், ஒரு வயது சிறுமியும் ஆகிய இரு குழந்தைகளின் கல்வி மற்றும் அன்றாட கற்றல் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும்.
இந்தப் பணி கற்பித்தலுக்குள் மட்டுப்படுவதில்லை. குழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்கள், நடத்தை, உடன்பிறப்புகளுக்கிடையேயான தொடர்புகள் போன்றவற்றையும் கவனிக்க வேண்டியுள்ளது. அதனால், குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு துணை நிற்கும் வகையில் செயல்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பணிக்கு சிறந்த ஆங்கிலத் திறன் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருமொழித் திறன் கொண்டவராகவும், சர்வதேச கல்வி சூழலை உருவாக்கும் திறன் பெற்றவராகவும் இருக்க வேண்டும். எதிர்காலத்தில் குழந்தைகள் அமெரிக்கா போன்ற நாடுகளில் கல்வி பயிலத் தயாராக இருக்க வேண்டும் என்பதற்கான அடிப்படை பயிற்சியையும் ஆசிரியர் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய உயர்ந்த சம்பளமும், கடுமையான தகுதிகளும் இணைந்த இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. குழந்தைகளின் ஆரம்பக் கல்விக்காக சில குடும்பங்கள் எந்த அளவிற்கு முதலீடு செய்யத் தயார் என்பதை இது வெளிப்படுத்துகிறது என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.
Read more: காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!



