தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நாளில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி சென்னை சாலிகிராமத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்று அரசாங்கத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான நாள். நான் வெளியூரிலிருந்து வந்ததால் வாக்கு செலுத்த தாமதமானது. ஆனால் இந்த முறை அதிக அளவில் பொதுமக்கள் வந்து வாக்களிப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
மேலும், கடந்த தேர்தலை விட இந்த முறை வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெளிவாக தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். “வாக்குப்பதிவு அதிகரிக்க காரணம் விழிப்புணர்வே. கல்வி பெற்றவர்கள் அதிகரித்துள்ளதால், வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணமும் மக்களிடம் அதிகரித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசியலில் ரீ-டேக் எடுக்கலாம். ஆனால் எந்த துறையிலும் எதுவும் எளிதல்ல” என்று அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, “இந்த தேர்தலில் ரீ-டேக் வருமா?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்கு நேரடி பதிலைத் தவிர்த்த அவர், “வராது சார்… யாராவது ஒருவர் வந்து தானே ஆக வேண்டும். என் வாயிலிருந்து எதையும் வர வைக்காதீர்கள்” என்று நகைச்சுவையாகவும், சாதுர்யமாகவும் பதிலளித்தார்.
இதையடுத்து, சமூக வலைதளங்களில் பல்வேறு அரசியல் ஆதரவாளர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சிலர், அவர் ஆளுங்கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார் என கூற, மற்றவர்கள் அது ஒரு பொதுவான பதிலாகவே பார்க்கப்படுகிறது என வாதிடுகின்றனர்.
Read more: 4 வயது குழந்தைக்கு டியூஷன் எடுக்க 2 கோடி சம்பளம்.. இணையத்தில் வைரலாகும் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!



