பிபிசி-யின் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆவணப்படம் குறித்து பிபிசி வெவ்வேறு முனைகளில் “தகவல் போரை நடத்துகிறது” என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
2002-ம் ஆண்டு குஜராத்தில் பிரதமர் மோடி முதல்வராக இருந்தபோது நடந்த கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை பிபிசி 2 பாகங்களாக சில நாட்களுக்கு முன் வெளியிடட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சைக்குரிய ஆவணப்படம் குறித்து கருத்து தெரிவித்த ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா பிபிசி தகவல் போரை நடத்துவதாக குற்றம் சாட்டினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “இந்தச் சூழ்நிலையில் நமது இந்திய நண்பர்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளனர். ரஷ்யாவிற்கு எதிராக மட்டுமல்ல, சுதந்திரமான கொள்கையைப் பின்பற்றும் மற்ற உலகளாவிய அதிகார மையங்களுக்கு எதிராகவும் – பிபிசி பல்வேறு முனைகளில் தகவல் போரை நடத்தி வருகிறது என்பதற்கு இது மற்றொரு சான்று என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
பிபிசி ஒரு சுதந்திரமான தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனம் அல்ல, மாறாக ஒரு சார்புடையது, பத்திரிகைத் தொழிலின் அடிப்படைத் தேவைகளை அடிக்கடி புறக்கணிக்கிறது” என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா கூறினார்.
2002-ம் ஆண்டு குஜராத்தில் பிரதமர் மோடி முதல்வராக இருந்தபோது நடந்த கலவரம் தொடர்பான சில அம்சங்களை ஆராய்ந்ததாகக் கூறும் பிபிசியின் இரண்டு பகுதி ஆவணப்படம், வெளிவிவகார அமைச்சகத்தால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறிய பிபிசி “உயர்ந்த தலையங்கத் தரங்களின்படி கடுமையாக ஆய்வு செய்யப்பட்டது” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிபிசி ஆவணப்படம் தொடர்பாக பிரதமர் மோடியை ஆதரித்துள்ளார், மேலும் அவர் தனது இந்தியப் பிரதமரின் குணாதிசயத்துடன் உடன்படவில்லை என்று வலியுறுத்தினார்.