சேலத்தில் அதிமுக பிரமுகரின் வீட்டில் எதிர்பாராத விதமாக திடீரென்று தீப்பற்றியதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே, அத்வைத ஆசிரமம் சாலையில் அதிமுக நிர்வாகி துரை புவனேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தன்னுடைய வீட்டிற்கு பெயிண்ட் அடிப்பதற்கு திட்டமிட்டார் ஆகவே அதற்கான பணிகளையும் செய்து வந்தார்.
இந்த நிலையில் தான், பெயிண்ட் அடிப்பதற்காக வந்த பணியாளர்கள் வீட்டில் இருந்த பழைய பொருட்கள் எல்லாவற்றையும், வீட்டின் மாடியில், ஒரு சிறிய தகர அறையில் வைத்து, பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், பெயிண்டர்கள் உபயோகமற்ற பழைய புத்தகங்களை, வீட்டின் மாடியில் வைத்து, எரித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக, தீப்பொறி பறந்து வந்து, அந்த சிறிய அறையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களின் மீது பட்டு, அதன் மூலமாக தீ மளமளவென பரவியது. இதனால், அந்த இடம் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
இதனை கவனித்த அங்கிருந்த பணியாளர்கள், என்ன செய்வது என்று தெரியாமல் பதற்றத்தில் நின்றனர். ஆகவே, உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆகவே அவர்கள் விரைந்து வந்து, வேகமாக செயல்பட்டு, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கின்ற பகுதியில், நடந்த இந்த தீ விபத்து காரணமாக, அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.