திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் மாயமானதாக புகாரளிக்கப்பட்ட நபர், இளம்பெண்ணை கேலி செய்த விவகாரத்தில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டு, மதுரை அருகே உள்ள குடிநீர் தொட்டியில் சடலமாக வீசப்பட்ட பயங்கர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
செம்பட்டி பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மகன் சங்கிலி முருகன் (38). இவர் கடந்த 10-ஆம் தேதி முதல் திடீரென மாயமானதை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் செம்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த நபர்களிடம் சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சங்கிலி முருகன் கொலை செய்யப்பட்டு அவரது உடல் மறைக்கப்பட்டிருப்பது அம்பலமானது.
விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த பாக்கிய செல்வம் என்பவரது மகளைச் சங்கிலி முருகன் கேலி செய்ததாகவும், இதனால் இரு குடும்பங்களுக்கும் இடையே கடுமையான முன்விரோதம் ஏற்பட்டதும் தெரியவந்தது. இதில் ஆத்திரமடைந்த பாக்கிய செல்வம், தனது கூட்டாளிகளான முருகன் மற்றும் மருதுபாண்டி ஆகியோருடன் சேர்ந்து சங்கிலி முருகனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, சங்கிலி முருகனை திண்டுக்கல் சாலையில் காரில் கடத்திச் சென்று, ஓடும் காரிலேயே அவரது கழுத்தை அறுத்த படுகொலை செய்துள்ளனர். பின்னர், உடலை மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பின் குடிநீர் தொட்டிக்குள் வீசிவிட்டுத் தப்பியோடினர்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட பாக்கிய செல்வம், முருகன், மருதுபாண்டி ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்கள் கொடுத்த தகவலின்படி குடிநீர் தொட்டியிலிருந்து அழுகிய நிலையில் இருந்த சங்கிலி முருகனின் சடலத்தை மீட்டனர். இச்சம்பவம் திண்டுக்கல் மற்றும் மதுரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



