பீடி மற்றும் திரைப்பட துறையைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இம்மாதம் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 1-ம் வகுப்பு முதல் கல்லூரி, ஐடிஐ / டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு 1,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மாணவர்கள் https://scholarships.gov.in/ என்ற இணையதள முகவரியில் ஒரு முறை பதிவாக விண்ணப்பிக்க வேண்டும். பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களில் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் https://scholarships.gov.in/ என்ற இணையதளத்தில் கல்வி நிறுவனத்தின் மூலமாக மாணவர்கள் விண்ணப்பங்களை சரிபார்த்து ஒப்புதல் வழங்க வேண்டும். கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் பெயரில் வங்கி கணக்கு மற்றும் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும்.
பீடி தொழிலாளர்கள் 1,20,000 ரூபாய் மற்றும், திரைப்படத் தொழிலாளர்களுக்கு 96,000 ரூபாய்க்கான வருமான சான்றிதழையும் இணைக்க வேண்டும். எனவே புதிதாக விண்ணப்பிப்பவர்கள், புதுப்பிப்பவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகள் தங்களது மாணவர்களின் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக சரிபார்ப்பதற்கான கடைசி தேதி நவம்பர் மாதம் 15-ம் தேதி ஆகும். மேலும் விவரங்கள் பெறுவதற்கும், கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விளக்கங்களுக்கு உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள பீடி தொழிலாளர் நலவாழ்வு நிதி மருந்தகங்களை அணுகவும் அல்லது நலத்துறை ஆணையர் (மத்திய அரசு) அலுவலகம், தொழிலாளர் நல அமைப்பு, தரைதளம், சிட்கோ கிளை அலுவலக கட்டடம், ஆலந்தூர் சாலை கிண்டி, சென்னை – 600032 என்ற அலுவலக முகவரியை அணுக வேண்டும்.



