ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில், புதிய திராவிட கழகத்தின் வெல்லட்டும் சமூகநீதி ஆறாவது மாநில மாநாட்டை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், திராவிடம் என்பதை கலைஞரோ, அண்ணாவோ முதல் முதலாக பயன்படுத்தவில்லை. 1856-ல் கால்டுவெல் அவர்கள் தென்னிந்திய மொழிகளை ஆய்வு செய்து, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்று புத்தகத்தை எழுதியிருக்கிறார்.
அதில்தான் திராவிடம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆரியர் என்பவர் யார்? திராவிடர் என்பவர் யார்? இரண்டும் வெவ்வேறு இனத்தை குறிக்கும் வார்த்தை என்று கால்டுவெல் விளக்கம் அளித்துள்ளார். இவ்வளவு தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தாலும் சங்கிகள் திராவிடம் குறித்து அவதூறுகளை பரப்பி வருகிறார்கள்.
மறுபுறம் திராவிடம் பற்றி தனக்கு ஏதும் தெரியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். தன்னுடைய கட்சியிலேயே திராவிடத்தை வைத்துக்கொண்டு அதைப் பற்றி எதுவும் தெரியாது என்று அவர் கூறி வருகிறார். திராவிடத்தை மட்டுமல்ல அவர் எம்ஜிஆரை, அண்ணாவையும் கூட மறந்து விட்டார். அவருடைய மனதில் இருப்பது எம்ஜிஆரோ, அண்ணாவோ, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவோ கிடையாது. அவருடைய மனதில் முழுக்க நிறைந்து இருப்பது அமித்ஷா மட்டும்தான்.
வங்கிகளுக்கு பல கிளைகள் இருக்கும். தலைமை அலுவலகம் டெல்லியில் இருக்கும். வங்கிகளை போல் பல கிளைகளுடன் தான் இங்கு சில கட்சிகள் செயல்படுகிறது. டெல்லியில் இருந்து இந்த கிளைகள் வழிநடத்தப்பட்டு, கட்டுப்படுத்தப்படுகிறது. இதே பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் மூத்த அமைச்சர், ஆன்மீக பயணம் செல்கிறேன் என்று அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்திருக்கிறார். அதன் பின் வேறு கட்சியில் இல்ல, வேறு கிளையில் இணைந்திருக்கிறார் என பேசினார்.



