தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தின் பால் நிறுவனமும், தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுபட்டு உள்ளன. ஆவின் பாலிற்கும், தனியார் பாலிற்கும் லிட்டருக்கு ரூ.20 வரை வித்தியாசம் இருந்து வருவதால், ஆவின் பால் கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுகிறது. கடந்த ஆண்டு 4 முறை தனியார் பால் விலை உயர்த்தப்பட்டது. கொள்முதல் விலை உயர்த்தப்படாத நிலையில், விற்பனை விலையை மட்டும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், ஆந்திராவை சேர்ந்த தனியார் பால் நிறுவனங்களான ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி, வல்லபா, சீனிவாசா ஆகியவை பால் விலையை உயர்த்தி உள்ளன. இந்த நிறுவனங்கள் பால், தயிர் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் வரை உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு நாளை (ஜனவரி 20) முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.