தமிழில் பெயர் பலகைகள் வைக்காத கடைகள் மற்றும் நிறுவனத்திற்கு, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளின்படி, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில் தான் உள்ளது. அனைத்து பெயர் பலகையிலும் தமிழைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் அனைத்து பொது இடங்களிலும் உள்ள பெயர் பலகைகள் தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழில் பெயர் பலகை வைப்பதை உறுதி செய்வதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில், மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவின் வாயிலாக, தமிழில் பெயர் பலகை வைப்பதை உறுதி செய்வதற்கான உத்திகளை வகுத்தல், தொடர்புடைய துறைகள் மற்றும் பங்குதாரர்களின் ஒத்துழைப்பை பெறுதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாதம் தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு நடத்த வேண்டும்.
மேலும் உள்ளாட்சி அமைப்புகளின் தமிழில் பெயர் பலகைகள் வைப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், துண்டு பிரசுரம் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் தமிழில் பெயர் பலகைகள் வைக்காத கடைகள் மற்றும் நிறுவனத்திற்கு, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளின்படி, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
அதே போல உணவு நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகைகள் வைக்கவில்லை என்றால், தமிழ்நாடு கேட்டரிங் நிறுவனங்கள் சட்டத்தின்படி, 500 ரூபாய் வரை அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையில் இதனை தீவிரமாக கடைபிடிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக தங்களது வணிக வளாகங்களில் தமிழில் பெயர் பலகைகளை வைத்திட வேண்டும்.
Read more: சினிமா பாணியில் சேஸிங்.. மணல் கடத்தல் லாரியை மடக்கி பிடித்த முன்னாள் அமைச்சர்..!!