ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில், பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் செய்த பீல்டிங் சாகசம் கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, தொடக்கம் முதலே ரன் வேட்டை நடத்தி ஆதிக்கம் செலுத்தியது. டி காக்கின் அதிரடி சதம் (112 ரன்கள்) அடித்து அணியை வலுவான நிலையில் நிறுத்தினார்.
அவருக்கு துணையாக நமன் திரும் அரைசதம் பதிவு செய்தார். ஒரு கட்டத்தில் 200 ரன்கள் எளிதாக எட்டப்படும் என கணிக்கப்பட்ட நிலையில், அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா வேகமாக ரன்கள் சேர்த்து ஆட்டத்தை மேலும் தீவிரப்படுத்தினார். போட்டியின் திருப்புமுனையாக அமைந்த 18வது ஓவரில், மார்கோ யான்சன் வீசிய பந்தை ஹர்திக் பாண்டியா லாங் ஆன் திசையில் தூக்கி அடித்தார்.
பந்து உயரமாக பறந்ததை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சிக்ஸர் என எதிர்பார்த்தனர். ஆனால், எல்லைப் பகுதியில் பீல்டிங் செய்துக் கொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் மின்னல் வேகத்தில் காற்றில் பாய்ந்து, ஒற்றைக் கையால் பந்தை பிடித்தார். எல்லைக் கோட்டிற்கு முன் மிக நுணுக்கமாக சமநிலையை பேணி, பந்தை மைதானத்திற்குள் தூக்கி வீசினார். அங்கு இருந்த மற்றொரு வீரர் அதை பாதுகாப்பாக பிடித்து விக்கெட்டை உறுதி செய்தார்.
ஸ்ரேயாஸ் ஐயரின் இந்த கேட்ச், வான்கடே மைதானத்தையே ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க வைத்தது. ஹர்திக் பாண்டியா விக்கெட்டை இழந்தது மும்பை அணிக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அதைவிட அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது ஸ்ரேயாஸ் ஐயரின் இந்த துடிப்பான பீல்டிங் தான். அந்த ஒரு தருணமே போட்டியின் போக்கை மாற்றிய திருப்புமுனையாக அமைந்தது.
இதன் பின்னர், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. ஸ்ரேயாஸ் ஐயர் எவ்வாறு அந்த அளவுக்கு உயரத்தில் குதித்து பந்தை தடுத்தார் என்பது நம்ப முடியாமல், ரோகித் சர்மா ஆச்சரியத்தில் சூர்யகுமாரிடம் சைகை காட்டிய காட்சிகள் கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Read more: PF குறித்த மற்றொரு புதிய தகவல்… சம்பள வரம்பு ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டதா..?



