திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கணவனை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்து, பின்னர் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, காணவில்லை என நாடகம் ஆடிய மனைவி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எரியோடு அருகே குருக்களையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையன் (50). லாரி டிரைவரான இவர், மனைவி தனலட்சுமி (39), 15 வயது மகளுடன் அருப்பம்பட்டி அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். மகள் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வருவதால், கணவன்-மனைவி இருவரும் மட்டுமே அங்கு இருந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு சுப்பையன் திடீரென மாயமானார். இதையடுத்து, தனலட்சுமி தனது கணவரை தேடி தருமாறு கடந்த 26ஆம் தேதி எரியோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, தனலட்சுமியின் பதில்களில் முரண்பாடு இருப்பதை கவனித்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த 28ஆம் தேதி இரவு, சுப்பையன் மதுபோதையில் வீடு திரும்பியபோது தகராறு ஏற்பட்டது. தகராறு கை கலப்பாக மாற, சுப்பையன் மனைவியின் கழுத்தை நெரித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தனலட்சுமி, இரும்புக் கம்பியால் சுப்பையனைத் தாக்கினார். தலையில் படுகாயம் அடைந்த சுப்பையன் அங்கேயே உயிரிழந்தார்.
பின்னர் உடலை தென்னைத் தோப்பில் கொண்டு சென்று, இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்ததாக தனலட்சுமி ஒப்புக்கொண்டார். பின்னர் தன் மீது சந்தேகம் வராமல் இருக்கக் கணவர் மாயமானதாக காவல்துறையில் புகார் அளித்ததும் விசாரணையில் வெளிப்பட்டது. தற்போது எரியோடு போலீசார் தனலட்சுமியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியால் கணவன் கொலை செய்யப்பட்டு உடல் எரிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



