ஓணம் பண்டிகையை கொண்டாடச் சொந்த ஊர் செல்லும் கேரள மாநிலத்தவர்கள் வசதிக்காகச் சென்னையில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட விமானங்களுக்குக் கூட்ட நெரிசல் அலைமோதுகிறது. வார இறுதி விடுமுறையும் பண்டிகையும் இணைந்து வருவதால் பயணிகள் பலர் ரயில்களைத் தவிர்த்து விமானப் பயணங்களை ஆர்வமுடன் மேற்கொண்டு வருகின்றனர்.
பயணிகள் வருகை திடீரென அதிகரித்துள்ளதால், சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரளா செல்லும் விமானங்களின் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. வழக்கமான கட்டணங்களை விட பல மடங்கு கூடுதல் விலைக்குப் பயணிகள் டிக்கெட் வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதாவது, சென்னை – கொச்சி வழக்கமான கட்டணம் ரூ.5,336, இன்று ரூ.14,843ஆக உயர்ந்துள்ளது. மேலும் சென்னை- திருவனந்தபுரம் வழக்கமான கட்டணம் ரூ.5,853 இன்று ரூ.14,700ஆக உயர்ந்துள்ளது.
கட்டண உயர்வு பெரும் அதிர்ச்சியை அளித்தாலும், குடும்பத்தினருடன் பண்டிகையைக் கொண்டாடும் உற்சாகத்தில் பயணிகள் அதைப் பொருட்படுத்தாமல் பயணத்தைத் தொடர்கின்றனர். இருப்பினும், இது போன்ற பண்டிகைக் காலங்களில் கட்டணக் கொள்ளையைத் தவிர்க்கச் சென்னையில் இருந்து கூடுதல் சிறப்பு விமானங்களை இயக்க வேண்டும் என்பதே பயணிகளின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.



